பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356 / அயோத்திதாசர் சிந்தனைகள்

காப்பதற்கு போலீசார்களையும் நியமித்துக் குடிகளுக்குத் துன்பம் நேரிடுங்கால் அவற்றை நீக்கி ஆதரிப்பதற்கும் எவ்வளவோ பணவிரயஞ் செய்து வருகின்றார்கள். ஈதன்றி பஞ்சங்கள் நேரிடுமாயின் அதற்கு இவர்கள் வசூலித்துள்ள வரிகளைக் கொண்டு உதவிபுரிவதுடன், தங்கள்தேயக் கனவான்களைக்கொண்டும் உதவி பெற்று பஞ்சத்தில் நசியும் குடிகளை சீர்தூக்கி ஆதரித்து வருகின்றார்கள்.

சு. பரதேசியாரே, தாங்கள் சொல்லிய வண்ணம் நமது ராஜாங்கத்தார் சில பேரானந்தசுகங்களை அளித்துவருகின்றார்களாயினும் பிளேக் வியாதிகளை நீக்கும் உத்தியோகஸ்தர்களையாயினும், துஷ்டர் பயங்களை அடக்கும் போலீசார்களையாயினும், ஏழைக்குடிகளும் ஏழை நாட்டுப்புறத்து வண்டிக்காரர்களுங் காணுவார்களாயின் நம்மெய் காக்கும் உத்தியோகஸ்தர்களாச்சுதே என்னும் ஆனந்தங்கொள்ளாமல் அவர்களைக் கண்டவுடன் மிக்க பயப்படுகின்றார்களே, அதன் காரணமென்னை.

ப. சுதேசியாரே, கருணைதங்கிய ராஜாங்கத்தார் சுதேசிகளைக் கொண்டே சுதேசிகளைக் காக்கும் உத்தியோகங்களைக் கொடுப்பதாயின் தேசாபிமானத்தால் கருணை வைத்து குடிகளை சீர்திருத்திக் காப்பார்களென்னும் எண்ணத்தால் நியமித்திருக்கின்றார்கள். அத்தகையக் கருணை சாதிபேதமுள்ள இத்தேசத்தோருக்கில்லாது குடிகளை பயமுறுத்துவதாயின் அஃது சுதேசிகளின் கருணையற்றச் செயலும் தோஷமுமே யன்றி பிரிட்டிஷ் ஆட்சியார் மீது தினையளவு தோஷமேனும் சொல்லுதற்கிடமிராது.

- 4:49; மே 17, 1911 -

சு. பரதேசியாரே, சுதேசிகளைக் கருணையற்றவர்களென்று கூறலாமோ.

ப. சுதேசியாரே, தங்களிடமிருக்குங் கருணையைத் தங்கள் மனைவி மக்களிடம் மட்டிலுங் காண்பிப்பார்களன்றி, ஏனையோரிடங் காண்பிக்க மாட்டார்கள். அதன் காரணமோவென்னில், சாதிபேத மதபேதமென்னும் பொய்ப் பிரிவினைகளேயாகும். என் சாதி பெரிது, அவன்சாதி சிறிதென்னும் சாதி கர்வமும், என்சாமி பெரிது, அவன்சாமி சிறிதென்னும் மதகர்வமும் ஒருவருக்கொருவர் மேலிட்டு சகோதர ஒற்றுமெயையும் அன்பையும் அகற்றி விரோதச் சிந்தனைகளே விரிந்து வருகின்றபடியால் பொதுவாய கருணையென்பதற்று தங்கள் சுயப்பிரயோசனங்களில் மட்டிலுங் கருணையைக் கையாடி காலங்கழித்து வருகின்றார்கள்.

சு. பரதேசியாரே, பொதுவாய கருணை எவ்வகையால் தோன்றும்.

ப. சுதேசியாரே, நம்மெயும், நமது தேசத்தையும் ஆண்டுவரும் கருணைதங்கிய பிரிட்டிஷாரின் செயலையும் அவர்களது குணாகுணங்களையும் நன்காராய்ந்து அம்மேறை நடப்போமாயின் சகலருக்கும் பிரயோசனமாகும் கருணையின் செயலும் அதன் சுகமும் நன்கு விளங்கும். அங்ஙனமிராது என்சாதி பெரிது, என் சுவாமி பெரிதென்னுங் கொள்கைகள் நிறைந்தவர்களிடத்து பொதுநலங் காண்பதே அரிதாதலின் தற்கால சுதேசிகளுக்குக் கருணையென்னுஞ் செயல் வாய்ப்பது கஷ்டம், கஷ்டமேயாம்.

சு. பரதேசியாரே, பிரிட்டிஷாரைமட்டிலும் கருணை நிறைந்தவர்களென்று எவ்வகையாய் கண்டறியலாம்,

ப. சுதேசியாரே, கருணை நிறைந்த ஆங்கிலேயரில் ஓரந்தஸ்துள்ள உத்தியோகஸ்தராயிருப்பினும், கனதனம் வாய்த்த பிரபுவாயிருப்பினும், கலைநூற் கற்ற வித்துவானாயிருப்பினும் வீதி உலாவி வருங்கால் சாக்கடை வாருங் கூலியாயினும், மலமெடுக்குமூழியனாயினுந் தவறி கீழே விழுந்துவிடுவானாயின் கருணையினால் அவனை மனிதனென்றெண்ணி வாரியெடுத்து அவனது காயங்களை தனது வஸ்திரங்கொண்டு துடைத்து ஆயாசந் தீர்த்து வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டியதாயின் வண்டிக்காரனுக்கேனும், கூலிக்காரனுக்கேனும் தனது பணத்தைக் கொடுத்து உதவி புரிந்தனுப்புவதுண்டு. சுதேசிகளில் சாதிபேதம் வைத்துள்ள ஓர் மூட்டைத் தூக்கியாயினும், குப்பைவாரியாயினும் வீதியிற் போகுங்கால் நாகரீகமுள்ள ஓர் மனிதன், தவறி