பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 365

வைத்துப் பாதுகாப்பதுடன் இப்போது இராஜதுரோகம் செய்துவரும் சாதியோர்களுக்குள் எச்சாதியோர் பெருந்தொகையினராகக் காணப்படுகின்றார்களோ அச்சாதி உத்தியோகஸ்தர்களிடத்திலே நூற்றுக்கு இவ்வளவென்னும் இராஜதுரோக வரியென விதித்து வசூல் செய்து இரிஜிமெண்டின் சிலவைச் செய்துவருவதாயின் தங்களில் தாங்களே அடங்கி பேராசையை ஒழித்து பழய தொழிலில் நிற்பார்கள்.

அங்ஙனமின்றி கருணைதங்கிய ராஜாங்கத்தோர் சாம, தான, பேதமென்னும் உபாயத்தில் மட்டும் நின்று தண்டத்தைக் கையாடாவிடின் இராஜாங்கத்தோரென்னும் அச்சமொழிந்து மச்சினங்கொண்டாடுவார்கள். “கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சு” என்னும் பழமொழிபோல பிரிட்டிஷ் அரசாட்சியை மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் இழுக்கிலுந் தாட்சண்ணியத்திலும் விட்டிருக்கும் வகையில் ஆட்சியைப் பிள்ளைப்பூச்சியென்றே எண்ணி நடப்பார்கள்.

அதன் விவரம் யாதெனில், கீழ்சாதியோன் திருடினாலும்சரி மேற்சாதியோன் திருடினாலுஞ்சரி, கீழ்ச்சாதியோன் கொலைபுரிந்தாலும் சரி மேற்சாதியோன் கொலைபுரிந்தாலும் சரி, சட்டப்படிக்கு சமரச தண்டனை விதித்துவருகின்றார்கள். இவ்வகை விதிக்கப்பெற்றோர் சிறைச்சாலைக்குப் போனவுடன் கீழ்ச்சாதிக்கு சாப்பாடு மேற்சாதிக்கு சாப்பாடு வேறிட மென்பதாயினும் சாப்பாடு செய்பவன் பெரிய சாதியோனாய் இருக்கவேண்டும் என்பதாயின் அவனடைந்துள்ள தண்டனைபால் சாதிகர்வமடங்காது வெளிவந்துந் தன்னுடைய துஷ்டச்செயலில் முன்னேறுகின்றான்.

அத்தகையச் செயல்களை நோக்கிவருங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் துஷ்டர்களாம் இராஜதுரோகிகளும் கொலைப்பாதகர்களும் குடிகேடர்களும் களவாடிகளும் சட்டப்படி தெண்டனை அடைந்து சிறைச்சாலைக்கு வருவார்களாயின் அவர்கள் செய்துவந்த செயல்கள் யாவும் கீழ்ச்சாதி செயல்களெனக் குணித்து சிறைப் பட்டவர்களிற் மேற்சாதி கிடையாதெனும் ஓர் பொதுச்சட்டத்தை விதித்துவிடுவார்களாயின் இராஜாங்கத்தை அடுத்ததாலும் பெரும் உத்தியோகங்கள் உண்டு, சிறைச்சாலைக்குப் போனாலும் சாதிசுகமுண்டென்னும் மமதை அடங்கி இராஜவிசுவாசத்தில் நிலைப்பார்கள்.

அதாவது, பிரிட்டிஷ் ஆட்சியாயிருந்தும் நாம் வைத்துக்கொண்டுள்ள சாதியாட்சிகள் மட்டுங் கலையாது நின்றுள்ளபடியால் இராஜரீகமும் செல்வாக்கும் நம்முடையதே என்னுஞ் செருக்கடைந்திருப்பதுடன் இராஜாங்கத்தையே அபகரிக்கத்தக்க முயற்சியிலும் இருப்பதாக விளங்குகின்றது.

ஆதலின் “கொள்ளியை இழுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிப்போம்” என்னும் பழமொழிக்கிணங்க வித்தியா கர்வம், தனகர்வம், சாதிகர்வம் மூன்றினையும் அறுக்கும் வழி தோன்றுமாயின் இராஜதுரோகிகள் தங்களில் தாங்களே யடங்கி அபயமாவார்கள்.

ஈதன்றி ஒவ்வோர் கவர்ன்மெண்டு ஆபீசில் ஒவ்வொரு சாதியோருக்குள்ளும் நாலு பேருக்கு மேற்படாதிருத்தல் வேண்டும். அப்படி அதிகமாக இருப்பவர்களை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி கணக்குபடி நிரவவேண்டியது. சகலசாதியோரும் சமரசமாக ராஜாங்க உத்தியோக சாலையிலிருக்கும்படிச் செய்யவேண்டியது. ஒவ்வொரு ஆபீசுகளிலும் சாதியாசாரமுள்ள பியூன்களை வைத்துக் கொண்டு தங்கள் அலுவல்களையும் பார்த்துக் கொள்ளுகின்றார்கள். அவ்வகையோர்களைப் பியூன்களில் வையாது சாதியாசாரமில்லாதவர்களைப் பியூன்களில் வைப்பதாயின் இராஜாங்கவிஷய சகல சங்கதிகளுக்கும் சுகந்தரும், இராஜாங்க ஆபிசின் தலைமெ உத்தியோகஸ்தர்களும் பியூன்களும் சாதிபேதமில்லாதவர்களாயிருந்து மற்ற உத்தியோகஸ்தர்களில் சகலசாதியோருங் கலந்திருப்பார்களாயின் இராஜ துரோகிகளின் செருக்கும் அவர்களது வஞ்சகமும் அடங்கி தாங்களே ஒடுங்கிப்-