பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதை மறுத்துத் துள்ளித் துடித்து ஆரியமதத்தோ ரென்பார்கள். ஆரியனென்றால் யார், அவன் எங்குதித்தவன், அவனால் போதித்த நூலெவை. ஆரியனென்பதற்குப் பொருள் திவாகரத்திலும் நிகண்டிலும் மிலேச்சரென்று கூறியிருக்கின்றதே, அவர்கள் தான் நீங்களோ வென்றால் அவற்றிற்கு மறுமொழி கூறாது, நாங்கள் சைவம் வைணவமென்னும் உள்மதத்தோரென்பார்கள். அங்ஙனம் சைவனென்றேனும் வைணவனென்றேனும் ஓர் மனிதன் தோன்றியிருந்தது உண்டாவென்றால் எங்களுடையது அனாதிமதமென்பார்கள். அத்தகைய அனாதி மதத்திற்கு சைவமென்றும் வைணவமென்றும் பெயர்கள் தோன்றியக் காரணம் என்னையெனில், அவற்றை விடுத்து வேதாந்தமதம், விசிட்டாத்துவித மதமென வேறுவேறு மாறுமதங்களைக் கூறி வினாவுவோரை மயக்குறச் செய்வதுடன் தாங்களும் மயக்குற்று திகைத்து நிற்பர்.

இத்தியாதி திகைப்பிற்குக் காரணம், இந்து மதமென்னும் ஆகாயக்கோட்டையும் அந்தரப் புட்பமுமேயாம். அதாவது ஆகாயத்திற் கோட்டையபுள தென்பதுங் கற்பனை, ஆகாயத்திற் புட்பம் பூர்த்துள தென்பதுங் கற்பனையென முகிவதுபோல் இந்து வென்னும் மொழியும், இந்துவென்னும் மதமும் மொழிமாற்று கற்பனாமதங்களைத்தழுவியுற்றலால், வினாவுக்கு விடையற்று மயங்குகின்றது.

இந்து மொழியின் முதல் மொழி ஏதெனில், புத்தபிரான் பஞ்சவிந்திரியங்களை வென்று இந்திரரென்னும் பெயர்பெற்றதும், அவ்விந்திரரை பூசித்துவந்த இத்தேசக் குடிகளை இந்தியர்களென்று வழங்கிவந்ததும், இந்தியர்க ளென்னுங் குடிகள் வாசஞ்செய்துவந்த தேசத்தை, இந்தியமென்றும், இந்தியாவென்றும் வழங்கிவந்தார்கள். இத்தகைய இந்திரரென்றும், இந்தியரென்றும், இந்தியாவென்றும் வழங்கிவந்த மொழியானது மகமதியா துரைத்தனத்தில் இந்து, இந்துவென குறுக்கல் விகாரப்பட்டு மொழிமயங்கியவை. பொய்வேதத்தோர்களுக்கும், பொய் வேதாந்திகளுக்கும் பொய்க்குருக்களுக்கும், புத்தராம் இந்திரரென்னும் பெயர் மாறி, இந்து இந்துவென மொழிமயங்கி நிற்பது மேலெனக் கருதித் தங்களை இந்துக்கள், இந்துமதத்தோரெனச் சொல்லும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். தற்காலமுள்ள விசாரிணைப்புருஷர்கள் அவற்றை ஊன்றி கேட்க ஆரம்பித்துக்கொண்டதின் பேரில் நிலைகெட்டு உடைந்த மூங்கிற் கொம்புக்கு முருங்கைக் கொம்பை முட்டுக்கொடுப்பதுபோல் தங்கள் கற்பனை மதங்களுக்கும், பொருளற்ற கற்பனை மொழிகளுக்கும், சொற்பனா உதாரணங் கூறி திருப்தி செய்யப் பார்க்கின்றார்கள். அத்தகையத் திருப்தியை கல்லாரேற்பாரன்றி கற்றோர் ஏற்காரென்பது துணிபு.

- 5:16: அக்டோபர் 11, 1911 -


233. மிஸ்டர் பிப்பின் சந்திரபால்

இவரோர் வடநாட்டுப் பிரபுவின் பிள்ளையும் நன்கு வாசித்தவருமேயாம். அங்ஙனம் வாசித்தும் இராஜநீதி இத்தகையது குடிகளின் நிலை இத்தகையதென்று உணராது சீர்திருத்தத்தைநோக்கி வெளிதோன்றியது மிக்க பரிதாபமே.

அங்ஙனந் தோன்றியவர் “சுயராஜ் “ என்னுமோர் பத்திரிகையைப் பரவச்செய்தது என்ன கருத்தோ விளங்கவில்லை. பத்திரிகையைப் பரவச்செய்தவர் இராஜதுரோகச் சிந்தைக்குள்ளாயது ஏது கருத்தோ அதுவும் விளங்கவில்லை. அதாவது கற்றவரென்று மற்றவர்களால் நன்கு மதிக்கத் தோன்றியவர் கல்லாரென்னும் செயலே பெற்றுள்ளார். காரணம் ‘சுயராஜ்’ என்னும் பத்திரிகையைப் பிரசுரித்தவர், எத் தேசத்தை சுயராஜ்யமெனக் குறிப்பிட்டுள்ளார். சுயராஜ்யம் என்பதே நிலையற்ற தேசமாயினும், சுயசாதி இன்னதென்பதையேனுங் குறிப்பிட்டுள்ளரா, அதுவுங்கிடையாது. சுயபாஷை யாது என்பதையேனுங் குறிப்பிட்டுள்ளாரா, அதுவுங் கிடையாது. சுயமதம் ஈதென்பதையேனுங் குறிப்பிட்டுள்ளாரா, அதுவும் கிடையாது. பலதேசம்,