பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பதப்படுத்துகிறவனும் பறையன், கரும்பு முதலியவைகளை வெட்டி மிதித்து வெல்லமெடுப்பவனும் பறையன், மிளகாய், கொத்துமல்லி முதலியவைகளை மிதித்துத்துவைத்து ஐங்காயம் உண்டு செய்பவனும் பறையன், புளி முதலியவைகளை ஓடு நீங்கி உருட்டிக் கொடுப்பவனும் பறையன், வீடுகளின் அருகிலுள்ளக் கிணறுகளில் செம்பு பாத்திரமேனும் பித்தளை பாத்திரமேனும் விழுந்துவிடில் அக்கிணற்று நீரில் மூழ்கிப் பாத்திரத்தை எடுத்துக் கொடுக்க வேண்டியவனும் பறையனென்போனாயிருக்க பெரிய சாதிகளென்போர் மொள்ளக்கூடியக் கிணறுகளிலும் குளங்களிலும் பறையனென்போன் தண்ணீர் மொள்ளப்படாதென்று விரட்டி அடிக்கின்றார்களே அதற்காகப் பரிந்துக் கிணறுவெட்டப் போகின்றாரோ விளங்கவில்லை.

அங்ஙனம் சுத்த நீர் கிடைக்காத இடத்தில் ஏழைக்குடிகள் குடியிருப்பானேன், பெரியசாதிகளென்போர் வாசஞ்செய்யும் இடத்தில் அவர்களுக்குரியப் பண்ணைவேலைச் செய்கின்றபடியால் அங்கிருக்கும்படி நேரிடுகிறதென்பரேல் அவர்களுக்குக் குளங்களுங் கிணறுகளும் இல்லாமற் போயிற்றோ. அவர்களுக்கு நீர்வசதி இருப்பினும் அவற்றில் இவர்கள் இறங்கப்படாது, நீர்மொள்ளப்படாது என்பார்களாயின் மாடுகளிறங்கி நீரருந்தலாம், குதிரைகளிறங்கி நீரருந்தலாம், நாய்களிறங்கி நீரருந்தலாம், கழுதைகளிறங்கி நீரருந்தலாம், இவ்வெழிய மனிதர்கள் மட்டிலும் அவைகளிலிறங்கி நீர் மொள்ளப்படாதென்பதாயின் பெரும் விரோதிகளும் வன்னெஞ்சினர்களுமாகக் காணப்படுகிறதன்றோ.

அத்தகையப் பெரும் விரோதிகளும் வன்னெஞ்சினர்களும் வாசஞ் செய்யுமிடத்திலும் இவ்வேழைக்குடிகள் வசிக்கலாமோ. அத்தகைய பொறாமெ மிகுத்த வஞ்சினர்களுக்கும் இவர்கள் ஏவற் செய்யப்போமோ. சுத்தநீர் மொண்டு குடிக்கவிடாத கருணையற்ற லோபிகளுக்கும் இவ்வேழைக்குடிகள் வேலையுஞ் செய்யவேண்டும், வேலைவாங்கும் எஜமான் நீர் குடுக்காதபடியால் மிஸ்ட்டர் பாண்டியனவர்களுக்குக் கிணறுகள் வெட்டி நீரருந்தும் தன்மம் செய்யவேண்டும் போலும். அந்தோ! தண்ணீர்பந்தல் வைத்து தாகவிடாய் தீர்க்கும் தன்மப் பிரியர்களுக்கு ஊழியஞ்செய்ய உதவிப்புரிவது உசிதமும் தன்மமுமாகுமா. அன்றேல் சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாது விரட்டியடிக்கும் லோபிகளுக்கு ஊழியஞ்செய்ய உதவிபுரிவது உசிதமாமோ. இவ்விரண்டு கருத்தையும் நமது பாண்டியனவர்கள் ஆலோசிக்கவில்லை போலும்.

அல்லது இவர் கவனிக்காவிடினும் அமேரிக்கா முதலிய இடங்களுக்குச் சென்று பணவுதவி பெற்றபோது ஏழைக்குடிகளுக்கு என்னகுறையென்று பகர்ந்து பணம் பெற்றிருப்பார். அக்காலத்திலேனும் அவர்கள் சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத கருணையற்றவர்களும் உலோபிகளுமானோர் மத்தியில் இவர்கள் வாசஞ்செய்வானேன், அவர்களிடம் ஊழியஞ் செய்வானேனென்று கேழ்க்காமல் விட்டிருப்பர்களோ, இல்லை. இவர் சொல்லியது வேறாயிருக்கலாம். மனிதகூட்டத்தோரை மிருகங்களினுந் தாழ்ச்சியாக நடத்தக்கூடிய கருணையற்றவர்களும் ஈகை அற்றவர்களும் பரோபகாரம் அற்றவர்களுமாகிய லோபிகளாம் பூர்வசத்துருக்களிடத்தில் இவர்களை நெருங்கி வாசஞ்செய்யவிடாமலும் அவர்களுடைய ஏவல்களுக்குப் போகவிடாமலும் தடுத்து அப்புறப்படுத்தி, மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் மேலோரிடத்தும் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதம் பாராது உத்தியோகம் வேண்டியவர்களுக்கு உத்தியோகமும், அன்னம் வேண்டியவர்களுக்கு அன்னமும், நீர் வேண்டியவர்களுக்கு நீரும், உடை வேண்டியவர்களுக்கு உடையும் அளித்து ரட்சிக்கும் அன்புமிகுத்த தன்மப் பிரியர்கள் மத்தியில் வாசஞ்செய்யும்படியும் அவர்களுக்கே ஊழியஞ் செய்யும்படியும் போதித்து, கருணையற்ற சத்துருக்களைவிட்டு அப்புறப்படுத்தி, கருணைமிகுத்த மேலோர்களிடங் கொண்டு சேர்த்துவிடுவாராயின் மிஸ்டர் பாண்டியன் செய்வது மேலாய தன்மமாகும். இத்தகைய முயற்சியை ஒழித்து ஏழைக்குடிகளை ஆயிர வருடமாகப் பாழ்படுத்தி நசிக்கும் கருணையற்ற