பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 401

நியமிக்கும்படிவிடுவதினால் அவரவர்கள் மனம்போனவாறு வரிகளை நியமித்து சொந்த வீட்டுக்காரர்களும், குடிக்கூலி கொடுப்பவர்களுங் குய்யோ முறையோ என்னுங் கூச்சலிட்டுத் திரிகின்றார்கள்.

காரணமோவென்னில், இரண்டு ரூபாய் வரி செலுத்தி வந்தவர்களை ஐந்து ரூபா செலுத்த வேண்டுமென்றும், ஐந்து ரூபா வரி செலுத்தி வந்தவர்களை எட்டு ரூபா வரி செலுத்த வேண்டும் என்றும் எட்டு ரூபா வரி செலுத்தி உள்ளவர்களை பனிரெண்டு ரூபா வரி செலுத்த வேண்டுமென்றும் அவரவர்கள் மனம் போன்றவரிகளை விதித்து விட்டபடியினாலேயாம். மாதம் ஒன்றக்கு ஏழு ரூபாய் எட்டு ரூபாய் சம்பாதித்து சீவிக்கும்படியானக் குடும்பிகள் மாதம் ஒன்றுக்கு எட்டணா பத்தணா வீட்டிற்குக் குடிக்கூலிக்கொடுத்துத் தங்கள் காலங்களைக் கழித்து வந்தார்கள். அத்தகைய ஏழைக்குடிகளுக்கு வீட்டுக்குடையவர்கள் ஒருரூபா ஒன்றே கால் ரூபா வாடகை செலுத்த வேண்டுமென்றும், அவ்வகை செலுத்தாதோர் வீட்டை காலி செய்யவேண்டுமென்றும் உத்திரவு செய்துவிடுகின்றார்கள். முநிசபில் எல்லைக்குள்ளாகவே சற்று தூரமாக இருக்கும் வீடுகளுக்கு குடிக்கூலிக்கு யாரும் போவதே கிடையாது. சொந்தக்காரர்களே அநுபவித்து வருவதுண்டு.

அத்தகைய வீடுகளுக்கு ஏழைகள் செலுத்திவந்த இரண்டு மூன்று ரூபாயாய் இருந்த வரிகளை ஐந்து ரூபாய் ஏழு ரூபாயாக உயர்த்தியும் விட்டபடியால் சொற்ப சீவனமுள்ள ஏழைக்குடிகள் யாவரும் கண்கலங்கி தவிக்கின்றார்கள். குடிகளே ஏகோபித்து சுகாதாரத்திற்கென்று ஏற்படுத்திக் கொண்ட விஷயந் துக்கசாகரத்தை விருத்தி செய்துவருவதாக விளங்குகின்றபடியால் கருணைதங்கிய பிரசிடென்டவர்களும் முநிசபில் கமிஷனர் அவர்களும் ஏழைக்குடிகளின் மீது கிருபாநோக்கம் வைத்து தாங்களே வீடுகடோருஞ் சென்று பார்வையிட்டு சரியான வரிகள் விதித்து ஏழைகளின் கண்கலக்கங்களை நீக்குவார்கள் என்று நம்புகிறோம்.

ஈதன்றி (சன்தோம் அருகே) மயிலை மேட்டுச்சேரிப் பெரியச்சேரியென வழங்கும் ஏழைக்குடிகள் வாசஞ்செய்யுங் கிராமங்களின் அருகே மலக்குப்பைக் கொண்டுபோய்க் கொட்டும்படி ஆரம்பித்ததுமுதல் அவ்விடமுள்ளக் குடிகள் பற்பல வியாதிகளால் பீடிக்கப்பட்டு மடிவதுடன் சிலக் குடிகளும் வெளியேறிவிட்டார்கள். அத்தகைய இடங்களிலுள்ள வீடுகளுக்கும் வரிகளை அதிகரித்துவிட்டதாக முறையிடுகின்றார்கள். இத்தியாதி இடங்கள் யாவிலும் சென்று பெரிய உத்தியோகஸ்தர்களே நேரில் பார்வையிட்டு அந்தந்த வீடுகளுக்கும் அங்கங்குள்ள ஏழைக்குடிகளுக்குத் தக்கவாறு வரி அளித்து ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 5:42; மார்ச் 27, 1912 -


249. சென்னை இராஜதானியின் ஆக்டிங் கவர்னர்

நமது சென்னை ராஜதானிக்கு நிலையாக வரவேண்டிய கவர்னரது வருகை ஏதோ சில அசந்தர்ப்பத்தால் தாமதப்பட்டிருக்கின்றபடியால் அவர் வருமளவும் நமது ஆனரேபில் ஆமக் பெருமானவர்கள் ஆக்ட் செய்வாரென்பதைக் கேழ்வியுற்று அனந்தானந்தம் அடைகின்றோம். அதாவது இச்சென்னை ராஜதானியில் அனந்தவருடமாக இருந்து இத் தேசத்தோரது நூதன சாதி வித்தியாசங்கள் நாளுக்குநாள் பெருகிவருவதும், மதவித்தியாசங்கள் நாளுக்குநாள் பெருகிவருவதும், விவசாய உழைப்பாளிகள் ஊரைவிட்டோடுவதும், அதனால் பண்ணை பூமிகளின் விருத்தி குறைந்து வருவதுமாகிய கஷ்ட நஷ்டங்கள் யாவும் அவருக்கு நன்றே தெரிந்தவிஷயங்களாகும்.

அவ்வகை தெரிந்துள்ள காருண்யருக்கு ஏழைக்குடிகள் யாவரும் ஒன்றுகூடி சாதிபேதமுள்ளக் குடிகளாலும், சாதிபேதமுள்ள உத்தியோகஸ்தர்களாலும் சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுக்கு என்னென்ன இடுக்கங்கள்