பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பிச்சையேற்கும் சோம்பேறி வித்தைகளையே பெருக்கிவருகின்றார்கள். அதனால் துரைத்தனத்தோர் கருணைகொண்டு கற்பித்துவரும் அரியவித்தைகள் எங்கு விருத்தி பெரும்.

இராமாயணத்தைப் படிப்பதும் சுகம், கேட்பதும் சுகமென்பதாயின் அநுபவத்திற்குப் பொருந்துமோ, ஒருக்காலும் பொருந்தாவாம். எங்ஙனம் என்பரேல், இராமரது மனைவியை இராவணன் எடுத்துப் போனதால் அந்த யுத்த கதை நேர்ந்த தென்பது கருத்து. அதனுள் ஒருவன் தாரத்தை எடுத்துப் போனதால் அவ்வூரையும் அவ்வூரிலுள்ள மக்களையும் நாசப்படுத்திவிட்டால் அவனையும் அவனை அடுத்தோர்களையுந் துன்பப்படுத்த முயன்று தானுங் கேடு அடைவானா, கேடு அடையமாட்டானாவென்பதை சீர்தூக்கி ஆலோசிப்பானாயின் அக்கதையைப் படிக்கும் சுகமும் கேட்கும் சுகமும் அன்றே விளங்கும்.

பாரதக்கதையைப் படிப்பதினாலுஞ் சுகமுண்டு, கேட்பதினாலும் சுகமுண்டென்பாராயின் அதுவும் அநுபவத்திற்குப் பொருந்தாது, எங்ஙனமென்னில் அக்கதா சுருக்கம் அண்ணன் தம்பிகள் பாகவழக்கு. அதையே மேலும் மேலுங் கலகத்திற்கு வளர்த்து தங்கள் சகோதரர்களையுங் குருக்களையும் பந்துக்களையும் கொன்றதும் போதாது, மற்றய தேச அரசர்களையும் படைகளையும் நாசப்படுத்திவிட்டார்களென்பதே. அத்தகையக் கதையையே நாளெல்லாங் கேட்பவன் தனது சகோதரருக்குச் சேரவேண்டிய பாகத்தை அன்புடன் கொடுப்பானா அல்லது விரட்டியடிப்பானா. அதனால் இவனுடைய சொத்தையும் சகோதரர் சொத்தையும் மற்றோர் கொள்ளுவரா, இவர்கள் சுகம் பெறுவார்களாவென்று பாரதக் கதாசுருக்கத்தை உற்றுணர்வதாயின் மக்களுக்கு சுகந்தருமா சுகந்தராதா என்பது அன்றே விளங்கும்.

புராணங்களைப் படிப்பதாலுங் கேட்பதாலும் சுகமுண்டென்பாராயின் அதுவும் அனுபவத்திற்குப் பொருந்தாது. எங்ஙனமென்னில் எங்கள் சாமி அன்னியன் தாரத்தை இச்சித்து அவளால் குழந்தையாக சபிக்கப்பெற்றார் என்றபோது சாமியே அன்னியன் தாரத்தை இச்சித்துள்ளார் என்னுங் கதையைக் கேட்பவன் அவ்விச்சிப்பில் நிலைப்பானா அதனால் உண்டாய் கேட்டில் நிலைப்பானா.

இத்தகைய சாமிகளையும் சாமிக்கதைகளையுங் கேட்பதினாலும் படிப்பதினாலும் சோம்பேறி வித்தைகளை நாளுக்குநாள் பெருக்கி வருவதினால் தென்னிந்தியா சிறப்பைப் பெறுமா, தென்னிந்திய மக்கள் சீர்பெறுவார்களா, ஒருக்காலும் சீர்பெறப்போகிறதில்லை. எவ்வகையால் சீரும் சிறப்பு அடையலாமென்னில் “இராஜாங்க மெவ்வழியோ குடிகளுமவ்வழியே” என்னும் பழமொழிக்கிணங்க நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் செய்துவரும் அன்பின் செயலையும், நீதிநெறி வொழுக்கங்களையும், அவர்களது வித்தை புத்தி, யீகை சன்மார்க்கத்தையும் பின்பற்றுவோமாயின் தென்னிந்தியாவும் சிறப்பைப் பெறும் தென்னிந்திய மக்களும் சீர்பெறுவார்க ளென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 6;78; அக்டோபர் 9, 1912 -


273. பஞ்சம்! பஞ்சம்! பஞ்சம்!!!

கருணை என்பது கனவிலும் இல்லா இன்னாட்டில் காலமழை பெய்யாமலும், அல்லது சிலகால் பொய்யினும் பண்ணை பூமிகளை விருத்திச் செய்யாமலும், பூமிகளை விருத்தி செய்தற்கு கருணைதங்கிய கவர்ன்மென்றார் வேண பணமுதலும், ஆனகருவிகளுதவியும், விதைமுதல் உதவியுந் தந்து உற்சாகமளிக்கினும், விவசாயிகள் தங்கள் கண்ணையுங் கருத்தையும் அவற்றில் வையாது சாதி உற்சாகமே உற்சாகம், சாமி உற்சாகமே உற்சாகமென இருமாப்புற்று சோம்பலைப் பெருக்கி வருகின்றபாடியால் ரூபாயிற்கு மூன்றரைபடி மூன்றே முக்கால்படி விற்கும்படியான பெரும் பஞ்சத்தால் ஏழைமக்கள் யாவரும் வயிற்றிற்குக் கஞ்சிகிடையாது தவிக்கின்றனர். இத்தகைய காலத்தில் சுதேசிகள்,