பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 439

இவ்விடம் பரவியபோது தங்களுக்குத்தாங்களே பிராமணர்களென்று சொல்லிக்கொண்டுள்ளக் கூட்டத்தோர்களிற் சிலர் மகமதிய அரசர்களிடம் மந்திரிகளாகச் சேர்ந்து கொண்டு காரியாதிகளை நடத்திக்கொண்டு வந்ததாகவும் அக்காலத்தில் வந்துள்ள மகமதியபாலியர்கள் நீர்கரைகளுக்குப் போகும் பெண்களையும், கடைகளுக்குப் போகும் பெண்களையும், துராக்கிரமமா இழுத்துக்கொண்டுபோய்விடுவதும் பலவந்தஞ்செய்வதுமாக இருந்த செய்கைகளைக் கண்டுவந்த மந்திரிகள் மகமதிய அரசர்களை அணுகி இத்தேசப் பெண்களுள் மஞ்சள் சரடுடன் மாங்கல்லியம் அணிந்துள்ளப் பெண்கள் யாவரும் ஒவ்வொரு புருஷர்களுக்கு நியமித்துள்ளவர்கள் அவர்களைப்போய் மகமதிய பாலியர்கள் கைப்பற்றுவதும் துராக்கிரமம் செய்வதும் நியாயமல்ல. மற்ற வெறுமனேயிருக்கும் பெண்களைக் கைப்பற்றிக் கொண்டாலுங் குற்றமில்லை. ஒருவன் மனையாளைக் கெடுக்கலாகாது. ஆதலால் மங்கல்யங் கழுத்திலுள்ளப் பெண்களைப் பிடிக்கலாகாதென்று மகமதியர்கள் யாவரும் அறிவிக்கச்செய்துவிட்டு தங்களைச்சார்ந்தவர்கள் யாவருக்கும் சிறுவயதிலேயே பெண்களுக்கு விவாகஞ்செய்து மஞ்சட்சரடைக் கழுத்திலணைந்துவிடுங்கோள் அப்போதுதான் மகமதிய பாலியர்கள் நமது பெண்களை துராக்கிரமமாய் பிடிக்கமாட்டர்கள். மஞ்சள் சரடில்லாதோரைப் பிடித்துக்கொள்ளுவார்களென்று கூறியவுடன் அவர்களது மரபினர் சிறுவயதிலேயே விவாகஞ்செய்துவிட ஆரம்பித்துக்கொண்டதுடன் அவர்களது மதங்களைத் தழுவிய இத்தேசத்தோரும் சிறுவயதிலேயே பெண்களுக்கு விவாகஞ்செய்து விட ஆரம்பித்துக் கொண்டார்களாம். இத்தகைய விதிவழிகளை அநுசரித்து வருங்கால் விதவைகளாகிவிட்டப் பெண்களுக்கு மஞ்சட்சரடை எடுத்துவிட வேண்டியதானபடியால் அவர்களுள் ரூபவதியானவர்களை மகமதியர்கள் பிடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.

அதனால் கைம்பெண்களின் அழகைக் குறைத்துவிடவேண்டி அவர்களுக்கு நல்ல ஆடைகளும் ஆபரணங்களும் அணியாது சீரைக் கெடுத்ததுடன் தலைமயிரையுங் கழித்து மொட்டையடித்துவிடும் வழக்கத்தில் கொண்டுவந்துவிட்டார்களாம். இச்சிறுப்பெண்களை விவாகஞ் செய்து விடுவதும் குமரபருவ விதவைகளை மொட்டையடித்துவிடுவதும் சில மகமதிய பாலியர்களின் பயமே காரணமாகக்கொண்டு செய்து வந்ததாக விளங்குகின்றதேயன்றி வேறோர் சீர்திருத்தவாதாரங்களுங் கிடையாது சீர்கேட்டிற்கே மூலமாகிவிட்டது. அத்தகைய பயம் நீதியும் நெறியும் கருணையும் அமைந்த இப்பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இல்லாதபடியால் இக்காலத்திலும் அவற்றை அநுசரிப்பது வீண்செயலேயாதலின் சீர்திருத்தக்காரர்கள் அவற்றைக் கண்ணுற்று சிறுவயது விவாகத்தை அகற்றி விதவாவிவாகத்தை வழிக்குக் கொண்டு வருவார்களென்று நம்புகிறோம். “பழையன கழிதலும் புதிய புகுதலும், வழுவலகாலவ கையினானே” என்னும் சமணமுநிவர்கள் விதிப்படி காலத்தை அநுசரித்து தேசசீர்திருத்தத்தைச் செய்யவேண்டியதே அழகாம்.

- 6:27: டிசம்பர் 11, 1912 -


279. இராஜாங்க பெண் வைத்தியசாலையோர் கருணை வைத்தல் வேண்டும்

அதாவது நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த நமது பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் மக்கள்மீதும் மிருகங்களின்மீதுங் கருணை வைத்து வைத்தியசாலைகளை கட்டிவைத்து மாதம் ஒன்றுக்கு ஐன்பதினாயிரம் இலட்சமென்னும் செலவிட்டு டாக்ட்டர்களையும், அப்பாத்தகரிகளையும், டிரசர்களையும், கம்பவுண்டர்களையும், பெண்வேலைக்காரர் நர்சுகளையும், மற்றுஞ் சிப்பந்தி, வேலைக்காரர்களையும் நிறுமித்து ஏழைகள் முதல் கனவான்கள் வரையில் பேதமில்லாமலும் பெரியசாதி சின்னசாதி என்னும்