பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 457

அம்மொழியே பொருளற்ற இந்து இந்துக்களென வழங்கிவருகின்றபடியால் இந்தியர்களென்போர் வேறு இந்துக்கள் என்போர் வேறேயாம். அவ்விந்துக்களென்போர் அடித்த தன்மச்செயல்கள் யாவற்றிற்கும் இந்தியர்கள் என்போருள் விவேகமிகுத்தோர் விரோதிகளாக விருந்தபடியால் நூதன சாதிபேதங்களை ஏற்படுத்தி தங்களுக்கு எதிரிடையாயிருந்தவர்கள். யாவரையும் தாழ்ந்த சாதியோர்களென வகுத்துப் பலவகையான துன்பஞ் செய்து நசித்துவந்ததுமல்லாமல் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிலும் அவர்களுக்குள்ள பூர்வ விரோத சிந்தையால் ஆறுகோடி மக்களைத் தாழ்த்தியும் அல்லலடையவுமே செய்துவருகின்றார்கள். இவ் ஆறு கோடி மக்களும் சீர்பெற்று முன்னேற வேண்டுமென்னும் கருணையும் அன்பும் பிரிட்டிஷ் ஆட்சியோருக்கு இருக்குமாமாயின் பிரிட்டிஷ் அதிகார உத்தியோகங்களில் சாதித்தலைவர்களை அதிகப்படுத்தாது ஐரோப்பியர்களே பெரும்பாலும் ஆண்டுவருவது நலமாம். அப்போது சகலசாதியோரும் முன்னேறி சுகச்சீர்பெறுவார்கள், தேசமும் சிறப்பையடையும்.

சில பத்திராதிபர்களும் பிரசங்கிகளும் இந்துக்களுக்கு தேசத்தையாளும் வல்லபமும் மனத்திடமும் இல்லையோவென வற்புறுத்திப் பேசுகின்றார்கள் இந்துக்களென்போருள் பத்துரூபா சம்பள முநிஷிப்பு உத்தியோகம் பெற்று பத்து வருஷத்துள் பத்தாயிரரூபாய் ஸ்திதிவந்தனாகிறதும், ஐம்பது ரூபா சம்பள தாசில்தார் உத்தியோகம் பெற்று பத்துவருஷத்துள் ஐம்பத்தினாயிர ரூபாய் ஸ்திதிவந்தனாகிறதுமாகிய வல்லபத்தையும் மனோதிடத்தையும் குடிகள் அடைந்து வருங் கஷ்டநஷ்டங்களைப்பும் வரைவோமானால் வீணே விரியுமென்றடக்கிவிட்டோம். கருணைதங்கிய ராஜாங்கத்தோர் இந்துக்களுக்கு கலைக்ட்டர் உத்தியோகங்களைக் கொடுக்கலாமா அப்பரிட்சையை இங்கு வைக்கலாமா என்று கமிஷன் ஏற்படுத்தி வாசித்தவர்களை மட்டிலுங் கேட்டதை விடுத்து, அந்தந்த ஜில்லாக்களுக்கே சென்று சகலசாதி குடிகளையுந் தருவித்து கலைக்டர் உத்தியோகங்களையும் ஐரோப்பியர்களே நடத்துவது உங்களுக்குப் பிரியமா அல்லது இந்துக்களே நடத்துவது உங்களுக்குப் பிரியமாவென்று வினவிருப்பார்களாயின் சகல சங்கதிகளும் பரக்க விளங்கிப்போம். தற்காலம் ஐரோப்பியர்கள் மறுப்பை முறுமுறுப்போருந் தானே அடங்கியிருப்பார்கள். மற்றும் அதிகார உத்தியோகங்கள் வேண்டுமெனக் கேழ்ச்சவுமாட்டார்கள். ஆதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் சாதிபேதம் இத்தேசத்துள் வேறரன்றி இருக்குமளவும் சாதித்தலைவர்களுக்கு அதிகார உத்தியோகங் கொடுக்காமலிருப்பார்களென்று நம்புகிறோம்.

- 6:38; பிப்ரவரி 26, 1913 -


285. கருணைதங்கிய கவர்ன்மென்றார் கலாசாலைவுதவியுங் கல்வியின் விருத்தியும்

தற்காலம் நம்மெ ஆண்டு ரட்சித்துவரும் பிரிட்டிஷ் ஆட்சியார் நமக்கு செய்துவரும் நீர்வசதிகளும் நில வசதிகளும் வீதிவசதிக்களும் தந்திவசதி கடிதவசதிகளும் பிரயாணவசதிகளும் ஊர்காவல் வசதிகளும் அபாயத்தைக் காக்கும் வசதிகளும் பிணிகளைநீக்கும் வசதிகளுமான அனந்த உபகாரமாய வசதிகளைச் செய்துவருவதுடன் இவைகள் யாவற்றிற்குக் காரணமாக விளங்குங் கல்வியின் விருத்திக்காகச் செய்துவரும் உபகாரமே பேருபகாரமென்னப்படும்.

அதாவது தேசத்திலும் தேசமக்களிடத்திலுந் தோன்றும் அழகுகள் யாவற்றிலும் கல்வியின் அழகே மிக்கதென இத்தேச சீர்திருத்தக்காரரென விளங்கியப் பூர்வ சமணமுநிவர்கள் வரைந்திருக்கின்றார்கள். “குஞ்சியழகுங் கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்சளழகு அழகல்ல - நெஞ்சத்து, நல்லம்பாமென்னும் நடுவுநிலையாமெய்க், கல்வியழகேயழகு” என்பவற்றுள் எக்கல்வி அழகுடைத்தாமென்னில் சகலருக்கும் நடுநிலையாக விளங்கும் மெய்க்கல்வியே அழகுடைத்தாகும்.