பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 477

வாதிப்பதுடன் தேசத்தோரையும் கலங்கச்செய்து விடும் ஆதலின் கருணைதங்கிய சுகாதாரத் தலைவர்கள் கலப்பு சரக்குகள் விற்போரையும் பழைய பண்டங்களை விற்போரையும் சற்றுக் கண்ணோக்கும் படி வேண்டுகிறோம்.

- 7:9; ஆகஸ்டு 6, 1913 -


296. குடியாலும் கூத்துகளாலும் உண்டாகுங் கேடுகள்

குடி என்பது சாராயக்குடி, கள்குடி என்பவைகளேயாம், இக்குடியால் இராஜாங்கத்தோருக்கு அதிக வருமானமுண்டு அதனால் அதை விருத்தி செய்கின்றார்கள் என்று பேசுகிறார்கள், அம்மொழி வீண் மொழியேயாம். பிரிட்டிஷ் ஆளுகைக்கு முன்பே கள்ளும் சாராயமும் இத்தேசத்தில் வழங்கிவந்ததாக விளங்குகின்றது. அது மேலும் மேலும் பெருகி மக்கள் கெடுவதையுணர்ந்த ராஜாங்கத்தார் அவைகளுக்கு வரிகளையுயர்த்திக் குறைக்கும் வழிவகைகளைக் தேடினார்கள் அக்கடைக்காரர்களோ உருசிகண்ட பூனை உரியை உரியை தாவுதல் போல் ஒருவருக்கொருவர் போட்டியினால் தொகைகளை யதிகப்படுத்தி நூறுகுடிகள் கெடவும் ஒரு குடி பிழைக்குவுமான வியாபாரத்திலிருக்கின்றார்கள். இராஜாங்கத்தார் மேலும் மேலும் வரிகளை அதிகரிக்கச்செய்து கள்ளுக்கடை சாராயக்கடைகளை ஒடுக்கமுயலினும் அக்கடைவிற்போர் முயற்சிகள் குன்றுவதைக் காணோம்.

இராஜாங்கத்தோர்கள் சாராயத்தை விருத்திச் செய்ய முயன்றவர்கள் அல்ல என்பது எலியட் துரையவர்களின் நீதியே போதுஞ்சான்றாம், அஃதுயாதெனில் ஒரு மனிதன் கள்ளையேனும் சாராயத்தை ஏனுங்குடித்து வெரித்து வீதிகளில் சண்டையிட்டபோதிலும், விழுந்து கிடந்த போதினும் அவனைத் தலையாரிகள் கொண்டு போய் விட்டவுடன் அதிகாரிகள் விசாரித்து பனிரெண்டாறென்னும் ஒன்றரை டசன் அடியடித்து விடுவது வழக்கமாயிருந்தது என்பதை நாளது வரையில் வழங்கியும் வருகின்றார்கள். அத்தகைய எலியட்துரையவர்களின் காலத்தில் ஓர் மனிதன் நன்றாய் குடித்து வெறித்தும் சட்டத்திற்கு பயந்து வீட்டிற்போய் சேருமளவும் எலியட்துரை பெயரையும் பனிரண்டாறடி பயத்தையும் மனதிலுன்னி அவற்றை சொல்லிக்கொண்டே சென்றதும் மறுநாள் அவனையழைத்துவரச் செய்து பனிரண்டாறு வேஷ்டி வாங்கி கொடுத்தனுப்பியதுமாய சரித்திரத்தால் நன்கு விளங்குகின்றது. அதனால் கள்ளுக்கடை, சாராயகடைவிற்குங் கடைக்காரர்களாலும் அவற்றைக்குடிக்குங் கூட்டத்தோர் பெருகுவதினாலுமே அவை பெருகி மக்கள் பாழடைகின்றார்கள்.

அவற்றுள் சாராயக்கடைக்காரர்களோ அவைகளை விற்பனைச் செய்யத்தக்க வழிவகைகளை சொல்லத்தரமன்று. கள்ளுக்கடைக்காரர்கள் செயல்களோ அதனினும் விசேடமெயாம். இவற்றுள் வருஷக்குடியர் மாதக்குடியர், வாரக்குடியர், தினக்குடியர் பெருகி அவர்கள் மற்றோரால் இகழப்பெற்று சீரழிவதுடன் இல்லாட்களாகிய பெண்களையும் குடிக்க கற்பித்தது போதாமல் தங்கள் பிள்ளைகளுக்கு சுரங்கண்டால் கொஞ்சம் பிராந்தி வாங்கி கொடு, குழந்தைகளுக்கு சளிபிடித்தால் பத்தாய் வாங்கிக்கொடுவென்னும் பெருவழக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் குடியர்களாகி சீரழிந்து சிந்தை நைந்து குலமரபின் பேரழிந்து பாழாகிப் போகின்றார்கள்.

கல்வியற்றவர்களும் இழிதொழில் செய்வோருமானோர் தங்கள் தொழிலுக்குக் தக்க புத்தியென்பது போல் தங்கள் பிள்ளைகளை கள்ளுக்கடை, சாராயக்கடைகளுக்குக் கொண்டு போய் குடிக்கப் பழக்குகின்றார்கள். படித்தவர்களும் உத்தியோகஸ்தர்களும் பிள்ளைகளுக்கு வியாதி வந்தால் குடிக்கப் பழக்குகின்றார்கள். இஃது 'தொட்டிலாட்டம் சுடுகாடுசெல்லுமளவு முண்டு', என்னும் பழமொழி போல் சிறுவயதில் பழக்குஞ்செயல் பெரியோர்களாகியும் விடாது தொடர்ந்து குடிகேடராகின்றார்கள்.