பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பெயர்கூடி அவைகளை சேர்க்கவேண்டியதே பெரும் வேலையாகிப்போம். அவைபோல் இந்துக்களென்போருள் ஐந்தாறு பெயர் சேர்ந்து ஐந்நூறு பெயரை சேர்த்து ஓர் கூட்டத்தை முடிவுசெய்து காரியத்தை நடத்துவதாயின் கூட்டம் முடிந்தவுடன் மறுபடியும் அவர்களைக் கூட்டல் வேண்டுமேயன்றி அவர்களே முறிந்து சேரமாட்டார்கள் ஆரம்பத்தில் வீரியச் செயலுற்று வரவரக் காரிய ஊழலுற்றுப்போவது அநுபவமுங் காட்சியுமாயிருக்க அவ்விடமுள்ள இந்தியர்களுக்கு இவ்விடமுள்ளோர் வீண் வைராக்கியத்தையும், வீணாய உற்சாகத்தையும் உண்டாக்கிவிடுவது பிசகேயாம்.

ஈதன்றி பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் செளத்தாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களின் கஷ்டங்களை நோக்குவதில்லை என்று வீண்பிரளி செய்வதும் பிசகேயாம். அதாவது பிரிட்டிஷ் ஆட்சியோர் செளத்தாப்பிரிகர்களுக்கு சுயராட்சியங் கொடுத்துவிட்டார்கள் அத்தகைய ஆட்சியில் இராஜாங்க காரியாதிகளில் ஏதேனுங்குறைவுறுங்கால் அவர்களுடன் கலந்து ஆலோசிப்பார்களன்றி அவ்விடத்தியக் கூலிகளது உள் சீர்திருத்த விவகாரங்களில் மறந்தும் பிரவேசிக்கமாட்டார்கள். அவரவர்களது தேச உட்சீர்திருத்தங்களை அவர்கள் வசதிகள் எவ்வகையோ அவ்வகையாகச் செய்துக்கொள்ளுவார்கள். அதன் மத்தியில் நீதியும் நெறியுமைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் பிரவேசிக்க வேண்டுமென்பதும் நோக்கவேண்டுமென்பது நியாயவழுவேயாம்.

இத்தேசத்திலுள்ள பூமிகள் யாவையுஞ் சரிவர உழுது பண்படுத்தி சீவிக்காது புறதேசங்களுக்குப்போய் இத்தியாதி கஷ்டங்களையும் அநுபவிப்பதற்கு ஏதுவாக இருந்தவர்கள் யார், பொய்யாகிய சாதிநாற்றத்தைப் போர்த்துத் திரிவோர்கள் அன்றோ. இப்போது அவர்களுக்காகப் பரிதவித்து பணஞ் சேர்ப்பவர்கள் யார், அவர்கள் தானோ, இவர்கள் வேறோ விளங்கவில்லையே. இத்தேசப் பூர்வக் குடிகளாம் ஆறு கோடி இந்தியர்களை தலையெடுக்கவிடாமலும் சீர்பெறவிடாமலும் முன்னேற விடாமலும் பலவகையாலுங் கொல்லாமற் கொன்று பாழ்படுத்தி வருவதுடன் தீண்டக்கூடாதவர்கள் தீண்டக் கூடாதவர்கள் என்று தாழ்த்தி இழிவடையச் செய்து வருவோர் தங்களுடலில் துர்நாற்ற மலத்தையும் துர்நாற்ற நீரையும் துர்நாற்ற சீழையும் துர்நாற்ற வழும்பையும் சேர்த்து வைத்துள்ள தேசிகர்களோ, அன்றேல் பொறாமெ வஞ்சினங்குடிகெடுப்பு நிறைந்த பூவாலர்களோ யாதும் விளங்கவில்லை. ஆதலின் இத்தேசத்தில் வாழும்பூர்வ இந்தியர்களின் கஷ்டம் விளங்காதிருத்தலால் இருதிரத்தாரின் கஷ்டங்களையும் சீர் தூக்கி இனிது விளக்குவாம்.

- 7:28; டிசம்பர் 17, 1913 -


313. சௌத் ஆப்பிரிக்க இந்தியர்கள் எதிர்க்காமல் எதிர்க்குங் கஷ்ட நஷ்டங்களும், இந்தியாவில் பூர்வ இந்தியர்கள் கொல்லாமற் கொல்லப்படும் கஷ்ட நஷ்டங்களும்

சௌத் ஆப்பிரிக்காவில் குடியேறியுள்ள இந்தியக்கூலிக்குடிகள் இலட்சத்தியைன்பதினாயிரத்திற்கு உட்பட்டவர்களே யாவர். இவர்களுள் தங்கள் கைப்பணங்களைக் கொடுத்தே சென்றவர்கள் ஆயிரத்திற்கு ஒருவரேனும் இருவரேனும் இருக்கலாம். இப்போது அவ்விடமுள்ள இராஜாங்கத்தோர் குடியேறிய பின்னரே இந்தியரவர்களுக்குக் கூலிகளாகச் சென்று அவர்கள் காலதவணை நீங்கியவுடன் அதையே சுகநாடென்று எண்ணி விவசாய விருத்தியிலும் வியாபார விருத்தியிலும் மிக்க சிறப்புடையவர்களாக வாழ்ந்து வருவோர் இலட்சத்தி இருபதினாயிரம் பேரிருக்கலாம். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சிலக்கூலிகள் நூறுபவுன் இருநூறுபவுன் கையிருப்புடன் இந்தியாவிற்கே திரும்பி வந்திருக்கின்றார்கள் தற்காலம் இவ்விடக் கூலியாக ஒப்பந்தக் கட்டுப்பாட்டில் நின்று உழைத்து வருகின்றவர்கள் முப்பதினாயிரத்துக்குட்பட்டே இருக்கலாம். கூலிகளாக பொற்சுரங்கங்களிலும் கரிச்சுரங்கங்களிலும் தோட்டங்களிலும் வேலை