பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 515

தோஷமென்னவென்று கூறிவிடுவாராயின் அவர் ஒருவர் வார்த்தையை மறுத்து ஓராயிரம் பேர் கூடி கலக்கத்தை உண்டு செய்வது உலகப்பிரசித்தமாச்சே. இத்தகைய உள் சீர்திருத்தக் கலகத்தை உண்டு செய்யவிடாத, ஒற்றுமெபெறவும் அன்புப்பாரட்டவும் இல்லாதவர்கள் சுயராட்சியம் பெற்று குடிகளை அடக்கி இராட்சிய பாரமுந் தாங்குவரோ, இல்லை, கீரியையும் பாம்பையுங் கீரைத்தோட்டத்திற்குக் காவல் வைத்தது போலாம். மாட்டைப்பற்றிய இந்துக்கள் கலகத்தையும் பள்ளிவாசலைப் பற்றிய மகமதியர் கலகத்தையும் தங்களுக்குத் தாங்களே அடக்கி ஒற்றுமெப்படுத்த இயலாது பிரிட்டிஷ் போலிஸ் வந்து அடக்கவும் நியாயஸ்தலமேகவும் அவ்விடம் ஓர் மகமதிய நியாயாதிபதி இருப்பராயின் தங்கள் விசாரணையை செய்யலாகாது ஓர் துரையிடம் போகவேண்டுமென்பதும், ஓர் இந்து நியாயாதிபதியிருப்பாராயின் மகமதியர்கள் யாவரும் ஒன்றுகூடி தங்கள் விசாரணையை இந்து விசாரிப்பரேல் நியாயங் கிடைக்காது, ஒர் துரையிடமே போகவேண்டுமென்று கட்சி, பிரிதி கட்சியில் சலஞ்சாதிப்பவர்பால் சுயராட்சியங் கொடுத்துவிட்டு ஒருவருக்கொருவர் இராஜாங்கக் கலகமே நேர்ந்து விடுமாயின் அவற்றை அடக்குதற்கு பிரிட்டிஷ் படைவீரரே வந்து தீரவேண்டுமே யன்றி வேறெருவரால் அடங்குவது அரிதாமன்றோ. இந்துக்களுக்கும் மகமதியருக்கும் சேர்த்து சுயராட்சியங் கொடுப்பதிலும் பெரும் கலகமே உண்டாகிப்போம். மகமதியர் மதத்திலும் பாஷையிலும் ஒற்றுமெயிலும் அமைந்தவர்களென்று எண்ணி இந்திய சுயராட்சிய பாரத்தை அவர்கள் பால் ஒப்பிவிடுவதாயின் பல சாதிவேற்றுமெயும் பல மதப்பிரிவுகளும் நிறைந்துள்ள இந்துக்களால் மீளாமித்திர பேதக்கலகங்களே பெருகி தேசமும் தேசமனுக்களும் சீரழியும்படி நேர்ந்துபோம். இந்துக்களென்போருக்கே இந்திய தேச சுயராட்சியத்தைக் கொடுப்பதாயின் உள்ள சாதிபேதக் கேட்டாலும் மதபேதக் கேட்டாலும் சுயநல விருப்பாலுந் தேசம் அன்றே பாழடைந்துபோம். ஈதன்றி இராட்சிய பாரத்தை நியாயவாயலிற் கருதுங்கால் இந்துக்களென்போரும் இந்திய தேசத்தில் வந்தேறிய குடிகளே யாவர். மகமதியரென்போரும் அவ்வகையேயாம். இவ்விருதரத்தாருக்கும் இந்தியதேசம் சுயதேசமாகாததினால் அவர்கள் சுயராட்சியம் கேட்பதற்கும் ஆதாரமில்லை, பிரிட்டிஷ் அரசாட்சியார் அவர்களுக்குக் கொடுப்பதற்கும் ஆதாரமில்லை. இந்திய தேசப்பூர்வக் குடிகள் யாரோ அவர்களைக் கண்டு தெரிந்து இதே அரசாட்சியில் அவர்களும் முன்னேறி சுகச்சீர்பெற்று சுகராட்சியம் விரும்புவார்களாயின் அப்போதும் அவர்கள் இராட்சியபாரம் தாங்குவரா தாங்கமாட்டார்களா என்றறிந்தேயளிப்பது உசிதமாகும். ஆதலின் நமது பூர்வ இந்திய தேசக்குடிகளும் வந்தேறியுள்ளக் குடிகளும் தேறவாலோசித்து செய்யவேண்டிய காரியங்களும் பேசவேண்டிய வார்த்தைகளையும் விட்டு வெறும்வாயை மெல்லுவதுபோல் நாலைந்து பி.ஏ. பட்டம் பெற்றவர்களும் இரண்டொரு எம்.ஏ. பட்டம் பெற்றவர்களும் நானூறு ஐன்னூறு பெயரைச் சேர்த்துக்கொண்டு சுயராட்சியங் கேட்கப்போவதும் இராஜாங்க சட்டங்களைத் திருத்தப் பார்ப்பதும் வீண்பிரளியேயன்றி யாதொரு பயனுந் தராவாம். இந்திய தேச மனுக்களோ பிரிட்டிஷ் அரசாட்சியார் முன்னிலையில் பத்து வயதிற்கு ஒப்பாய சிறுவர் போலிருக்கின்றார்களன்றி வேறில்லை. இன்னுங் கற்றுத் தெளிந்து இராஜாங்க நீதிநெறியாளுகையீதீதென்றுங் குடிகளின் சுகவிருத்திகளின்னது இன்னதென்றும் கண்டு தெளிவதற்கு இன்னும் நெடுநாட் செல்லும். பிரிட்டிஷ் ஆளுகையின் செயலாலும் அவர்கள் அளித்து வரும் கல்வியாலும் அவர்கள் காண்பித்து வரும் வித்தையாலும் அவர்கள் போதித்துவரும் புத்தியாலும் மெய்யின்னது பொய்யின்னதென்றும் சுகமின்னது அசுகமின்னதென்றும் பலசாதி பல மதம் பல பாஷை மக்கள் ஒவ்வொருவருங் கிஞ்சித்துத் தெளிந்து சுகச்சீர் பெற்று முன்னேறி வருகின்றார்கள். இத்தகைய சுகவிருத்தி காலத்தில் தீட்டிய மரத்திற்கு கூர் பார்ப்பது போலும் உண்ட வீட்டிற்கு ரண்டகஞ் செய்வதுபோலும்