பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

580 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மற்றவர்களுடைய கண்களுக்குப் புலப்படாமலும் உலாவுவார்கள். எதிரில் தோன்றியும் நீதியின் வழியைப் போதிப்பார்கள்.

மண், நீர், காற்று, நெருப்பென்னும் நான்கு பூதங்கள் திரண்டு கன்மபந்தத்தால் பஞ்சஸ்கந்தமானிடரூபியாய்த் தோன்றி தனக்குள்ள நெருப்பாகும் தேயுவால் எழும் இராகத் துவேஷமோகங்களாகும் காம, வெகுளி, மயக்காக்கினிகளை நற்கருமப் பெருக்கத்தினாலும், நீதியின் ஒழுக்கத்தினாலும் சாந்தம், அன்பு, யீகை, என்னும் தண்ணீரால் அவித்து, நெருப்பு தேயுவென்னுஞ் சுடுகை அவிந்து தெய்வகம் தெய்வமென்னுந் தண்மெய் தோன்றி சகலராலும் துதித்துக் கொண்டாடப்படுவார்கள்.

இன்னிலை வாய்த்த மேன்மக்களையே பாலியென்னும் மகடபாஷையில் அறஹத்துக்களென்றும், சமஸ்கிருதமென்னும் சகடபாஷையில் பிராமணர்கள் என்றும், தமிழென்னும் திராவிட பாஷையில் அந்தணர்கள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.

இத்தகைய மேன்மக்களென்னும் சிறப்புப் பெயர்பெற்ற காரணம் யாதென்பீரேல் சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்குந் தண்மெய் நிறைவுகண்டேயாம்.

திரிக்குறள்

அந்தணரென்பே ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மெய்ப் பூண்டொழுகலால்.

இத்தன்மெய்ப் பெற்ற மேன்மக்கள் தங்கள் உருவை மண்ணுடன் மண்ணாகவும், நீருடன் நீராகவும், காற்றுடன் காற்றாகவும், நெருப்புடன் நெருப்பாகவும் கலந்து மறைவதுடன் சீவர்களுக்கு உபகாரிகளாகவும் விளங்குவார்கள். இவர்களையே விதேகமுத்தர்களென்றும், சித்தர்களென்றும், சாரணர்கள் என்றும் கூறப்படும்.

பின்கலை நிகண்டு

நீரிற் பூவில் வானில் நினைத்துழி யொதுங்குகின்ற
சாரண ரெண்மராவர் சமணரிற் சித்திபெற்றோர்.

இம்முதிர்ந்த முத்திநிலையில் ஒன்றாம் விதேகமுத்தியை எலியா, ஏனோக், கிறீஸ்து முதலிய மேன்மக்கள் பெற்றும் மற்றவர்களுக்கும் அவ்வழியைப் போதித்தும் இருக்கின்றார்கள்.

இதையே சித்துநிலை எனப்படும். பரிபூரணமாம் பரிநிருவாண முத்தநிலை யாதெனில்- உலகத்திலுள்ள வரையில் மக்களுக்கு உதவியாயிருந்து நன்னெறிகளைப் போதித்து சகலரையும் யீடேறும் பாதையில் விடுத்து புளியம் பழமும் ஓடும்போலவும், புழுவும் விட்டில்போலவும் தங்கள் தேகத்தை உதிரிவிட்டு சோதி உருவாய் அகண்டத்துலாவுவார்கள்.

இச்சிறந்த மார்க்கத்தை தன்னிற்றானே கண்டடைந்து ஆதிதேவ னென்றும், ஆதிகடவுளென்றும், ஆதிபகவனென்றும், பெயர்பெற்ற புத்தபிரான் உலகப்பற்றுக்கள் யாவையும் நீக்கி போதிநீழலில் நிருவாணம் பெற்று உலகெங்குமுள்ள மக்களுக்கு இம்மார்க்கத்தைப் போதித்து நல்வழியில் விடுத்து தன் தேகத்தை தகனிக்க உத்திரவு கொடுத்துவிட்டு சுயம்பிரகாச சோதியானது தேகமுழுவதும் வாள்போல் பரவி வெளிதோன்ற அசரீரியாய் அநித்திய வனாத்துமம் என்னும் நாமரூபமற்ற பரிநிருவாண நிலை அடைந்தார்.

- 2:35; பிப்ரவரி 10, 1909 -

பரிநிருவாண நிலையாம் சுயம்பிரகாச லட்சணம் வீரசோழியம்

கூரார் வளையுகிர் வாளெயிற்றுச் செங்கட்
கொலையுழுவை காய்பசியாற் கூர்ந்தவென்னோய் நீங்க
வேராயிரங்கதிர் போல்வாள் விரிந்தமேனி
யுவம் விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீயென்றாற்
காரார் திரைமுளைத்த செம்பவள மேவுங்
கடிமுகிழ்தண்சினைய காமருபூம்போதி
யேராம் முநிவரார் வானவர்தங் கோவே
யொந்தாயரோ நின்னை யேத்தாதார் யாரே.