பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

594/அயோத்திதாசர் சிந்தனைகள்

நசிப்பதற்கே இம்மனு தன்மசாஸ்திர மென்னும் நூலை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும்.

ஆதலின் இவ்விந்தியதேசத்தில் சாதிவைத்திருப்பவர்களெல்லாம் கனவான்களாகவும், பூர்வ பௌத்தன்மத்தை அநுசரித்து சாதியில்லாமல் உழைப்பாளிகளாய் இருப்பவர்களெல்லாம் ஏழைகளாகவும், நாளுக்குநாள் நசிந்துவருவது காரணம் பொய்சாதிவேஷமும், பொய்ம்மதகோஷமுமேயாகும்.

இச்சாதிபேத எக்காளதொனியைக்கேட்கும் விவேகிகளும், கனவான் களும், மற்றகாண்டங்களிலுள்ள ஏழைகளைப்போல் இந்து தேசத்திலுள்ள ஏழைகளைக் கவனிக்காமல் இவர்கள் யாவரால் நசுக்கப்பட்டு எழியநிலையை அடைந்து வருகின்றார்கள். அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள விரோத மென்னையென்று விசாரிப்பீர்களாயின் விஷயம் விளங்கும்.

- 3:8; ஆகஸ்டு 4, 1909 -

பூர்வத் தமிழர்களே, திராவிட பௌத்தர்களென்னும் பெயர்பெற்று சாதிபேதமென்னுங் களங்கமற்று சகலரும் ஒற்றுமெயுற்று வாழ்ந்து வந்ததுபோல் நாளதுவரையில் சாதிபேதமற்று வாழ்ந்துவருகின்றார்கள்.

பூர்வத்தமிழ்க்குடிகள் சாதிபேதமற்று வாழ்ந்து வந்ததற்கு ஆதாரம் யாதென்பீரேல், ஓர் திராவிட அரசன் புத்திரிக்கு சுய அரமென்னும் வில்வளைப்பேனும், மாலை சூடலேனும் ஒன்றைக் குறித்து சீனராஜன், சிங்களராஜன், வங்களாராஜன்,காம்போஜ ராஜனென்னும் ஐன்பத்தாறு தேசத்து அரசர்களையும் வரவழைத்து சீனராஜன் என்ன சாதி, சிங்களராஜன் என்ன சாதி என்னும் விசாரிணையின்றி யாருக்கு மாலை சூட்டப்படுகிறதோ, யாவர் வில்லை வளைப்பவர்களோ அவர்களுக்கே விவாகம் நிறைவேறிவந்தது வழக்கமாகும்.

அரசர்கள் யாவரும் சாதிபேதமென்னுங் களங்கமின்றி வாழ்ந்து வந்ததுபோலவே குடிகளும் சாதிபேதமென்னுங் களங்கமின்றி சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

அத்தகைய சுகசீவ வாழ்க்கைக்குக் காரணம் யாதென்பீரேல், மெய்வேதங்களென்னும் புத்த தன்மத்தைத் தழுவி வித்தையிலும், புத்தியிலும் விருத்தியைக் கருதி சகலபாஷையோரும் ஒற்றுமெயுற்று ஒருவருக்கொருவர் உபகாரிகளாய் இருந்தபடியால் சகல மக்களும் சுகசீவ வாழ்க்கை பெற்றிருந்தார்கள்.

அத்தகைய சுகவாழ்க்கைப் பெற்றிருந்தவர்கள் தற்காலம் பறையர்களென்று தாழ்த்தப்பட்டு அசுகவாழ்க்கைப்பெற்ற காரணங்கள் யாதென்பீரேல், மிலேச்சரென்றும், ஆரியரென்றும், பூர்வம் வழங்கிய ஓர் கூட்டத்தார் இவ்விடம் வந்து குடியேறி யாசகசீவனஞ் செய்துகொண்டே சகடபாஷையிற் சிலதைக் கற்று அறஹத்துக்களைப்போல் பிராமணவேஷமிட்டு பௌத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் மேற்சாதி கீழ்ச்சாதியென ஏற்படுத்திக் கொண்டு தங்களது பொய் வேதத்திற்கும், பொய் மதத்திற்கும், பொய்ச்சாதி கட்டிற்கும், உட்பட்டவர்கள் யாவரையுந் தங்களை ஒத்த உயர்ந்த சாதிகளெனச் சேர்த்துக் கொண்டு தங்களது பொய்வேதங்களுக்கும், பொய் மதங்களுக்கும், பொய்ச்சாதி கட்டுகளுக்கும், அடங்காது அப்புறப்பட்டு சத்தியதன்மத்தில் நிலைத்திருந்த விவேகிகள் யாவரையும் தாழ்ந்த சாதிகளென வகுத்து தலையெடுக்கவிடாமற் செய்துவந்தார்கள், நாளதுவரையில் செய்தும் வருகின்றார்கள்.

இந்துதேசத்திலுள்ள சருவபாஷைக் குடிகளையும், தாழ்ந்த சாதியென எவ்வகையால் வகுத்தார்கள். அவர்கள் யாவரென்பீரேல், வடயிந்தி (சில வரிகள் தெளிவில்லை )

- 3:9: ஆகஸ்டு 11, 1909 -

புத்ததன்மத்தை அநுசரித்து வந்த விவேகிகள் யாவரும் அபுத்ததன்மத்தோர்களாகிய பொய்ப் பிராமணம், பொய் வேதம், பொய்ச் சாதி, பொய் மதங்களைக் கண்டித்து அவர்களது வேஷபிராமணத்தையும் விளக்கிக்கொண்டு வந்தார்கள்.