பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

610 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கல்வியற்றக் குடிகளின் கண்களை கவர்ந்துகொண்டதன்றி இவர்களே சங்கத்து அறஹத்துக்களென்றும் பயந்து சகல பொருட்களும் கொடுக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

இவ்வேஷப் பிராமணர்களோ சங்கத்தோர் அருகிலும் நன்கு வாசித்துள்ள உபாசகர்கள் வீடுகளுக்குஞ் செல்லாமல் கல்வியற்றக் குடிகள் வாசஞ்செய்யும் குக்கிராமங்களுக்கே சென்று தங்களதிகார பிச்சையாலிரந்துண்டு சீவித்து வந்தார்கள். இத்தகைய வேஷத்தால் பெருங் குடிகளை தங்கள் வயப்படுத்திக் கொண்டதுமன்றி புத்ததன்மத்தின் ஞானமும், அதனந்தரார்த்தங்களுமறியா சிற்சில அரசர்களையும் தங்கள் பிராமணவேஷத்திலடக்கிக்கொண்டார்கள்.

புத்தசங்கத்தில் அடங்கியுள்ள புருஷர்களை மகடபாஷையில் பிக்குகளென்றும், இஸ்திரீகளை பிக்குனிகளென்றும், சகடபாஷையில் புருஷர்களை பார்ப்பார்களென்றும் வழங்கிவந்தார்கள். பாலியில் “பாப்போ” “பாப்பா” “பாப்பு” வெனுமொழி தண்மெயாம் சாந்தகுணம் அமைந்தோரென்பதாம். பாப்பு, பாப்பா, பாப்பாரென்னும் பெயர் வேறு நோக்காது தன்னை நோக்குஞ் சாதனத்தால் தண்மெய்ப்பெற்றவர்களாதலின் பௌத்த சங்கத்தைச்சேர்ந்து சித்திபெற்ற புருஷர்கள் பார்ப்பார்களென்றும் பௌத்த சங்கத்தைச்சேர்ந்து சித்திப்பெற்ற இஸ்திரீகள் பாப்பினிகளென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

சாதுசங்கஞ்சேர்ந்து புருஷர்கள் வேறு இஸ்திரீகள் வேறாகத் தங்கி இராகத்து வேஷ மோகங்களால் உண்டாம் சகலப்பற்றுக்களையும் அறுத்து தண்மெயாம் சாந்தநிலைப்பெற்று பாப்பான், பாப்பினியெனப் பெற்ற சிறந்த பெயரை வேஷப்பிராமணர்களாம் மிலேச்சர்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் சுகித்திருப்பதுடன் பொருளாசை மிகுதியுற்று சகலபற்றுமுள்ளவர்கள் வைத்துக்கொண்டு கல்வியற்றக் குடிகளிடஞ் சென்று தங்களைப் பாப்பார், பாப்பிணிகளெனக் கூறி அதிகாரப்பிச்சை இரந்துண்டு நூதனமாக இத்தேசத்திற் குடியேறிய மிலேச்சர்கள் யாவரும் தங்கள் தங்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் யாவரையும் பிராமணர், பிராமணரென்று சால்லவாரம்பித்துக்கொண்டார்கள்.

பெளத்ததன்ம மகடபாஷையில் அறஹத்தென்றும் சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிடபாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்றப் பெயர் கோடி மனிதருள் ஒரு மனிதனுக்கு வாய்ப்பதரிது. ஏனெனில் புத்தருக்குரிய வாய்மெயும், புத்தருக்குரிய சாந்தமும், புத்தருக்குரிய அன்பும், புத்தருக்குரிய பற்றற்றச் செயலும், புத்தருக்குரிய யீகையும், சருவசீவர்கள்மீதும் பதிந்திருந்த புத்தரது கருணையும், தனக்கு சிலர் தீங்கு செய்யினுந் தானவர்களுக்குத் தீங்கு செய்யாது சுகமளித்த புத்தரதுச் செயலும், எக்காலும் யீகையே குடிகொண்டுள்ள புத்தரது குணமும் யாரிடத்தில் தோன்றுகிறதோ அவர்களையே பிராமணர்களென்றழைத்து வந்தார்கள். அதுகெண்டே புத்தபிரானை திருத்தக்கத்தேவர் தானியற்றியுள்ள சீவகசிந்தாமணியில் “ஆதிகாலத் தந்தணன்காதன்” என வரைந்திருக்கின்றார். காக்கைபாடியனாரும் தாமியற்றியுள்ள பாடியத்துள் “ஆதிகாலத் தந்தணன் அறவோ” னென்றும் வரைந்திருக்கின்றார். அத்தகையப் பற்றற்றச் செயலும் பரிபூரண நிலையும் அமைந்தவர்களையே அறஹத்தென்றும், பிராமணரென்றும், அந்தணரென்றும், பாப்பாரென்றும் சொல்லத்தகுமேயன்றி சகல பற்றுக்களும் நிறைந்துள்ளக் குடும்பிகளுக்கு அப்பெயர் பொருந்தவே பொருந்தாவாம்.

இத்தகைய பொருந்தா சிறந்த பெயரை மிலேச்சர்களாம் ஆரியர்கள் வைத்துக்கொண்டு பெளத்ததன்மமும் அதன் செயலுமறியாப் பெருங்குடிகளையும் மற்றும் சிற்றரசர்களையும் வஞ்சித்து பொருள்பறித்துண்டு உடுத்திவருங்கால்; இவர்கள் புருசீக நாட்டிலிருந்து நமது தேசம் வந்து குடியேறியவர்களென்று அஸ்வகோஷர் நந்தனென்னும் அரசனுக்கு விளக்கியிருக்கின்றார். அதாவது நந்த நந்தனா, இந்த வேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரல்ல. இவர்கள் புருசீக தேசத்தார்கள். அப்புருசீகதேசத்திற்கும், உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்கு திக்கில் 27-நாள் பிரயாணத்திலிருக்கின்றது. அவ்விடத்திற் சென்று இவர்களுடைய தேக நிறத்தையும், அவர்களுடைய