பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/668

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

620 / அயோத்திதாசர் சிந்தனைகள்


வைசியர்களாம் வாணிபர்களின் அறுவகைத் தொழில்கள் யாதெனில், மகாஞானிகளால் ஓதிவைத்துள்ள நீதிநெறியில் நிலைத்துக் கலை நூல்களை வாசித்துணர்தல், வாசித்தவண்ணம் அடங்கி காம வெகுளி மயக்கங்களினின்று விடுபடுதல், புலன் தென்பட்டோராம் தென்புலத்தோரென்னும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் ஈதல், பசுக்கள் விருத்தியடையத்தக்க வழிகளைத் தேடுதல், உழவுக்கு வேண முதலுந் தானியமும் அளித்துக் காத்தல், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறும் வியாபாரத்தை விருத்திச்செய்தல் ஆகிய அறுதொழிலும் வணிகர் செய்ய வேண்டிய தொழில்களென்னப்படும்.

சூஸ்த்திரர்கள் என்னும் வேளாளர்கட்தொழில்கள் யாதெனில், பூமியை உழுது பண்படுத்தி தானியங்களாம் பலவளம் பெருகச்செய்தல், பசுக்களுக்கு சேதம்வராது காத்தல், வியாபாரத்திற்கான தானிய விருத்தி உதவல், பட்டு பருத்தி முதலியவற்றை விருத்திசெய்து ஆடைகளாங்காருகவினைசெய்தல், தோற்கருவி துளைக்கருவி முதலிய சூஸ்திரங்களியற்றி குயிலுவத்தொழிற் செய்தல், தாய் வயிற்றிநின்று பிறக்கும் பிறப்பொன்றும், ஞானசாதனம் முதிர்ந்து நிருவாணம்பெற்று பரிநிர்வாணமாம் தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகிய இருபிறப்பாளராம் அந்தணர்களுக்கு வேண்டிய ஏவல்புரிதல் ஆகிய அறுதொழிலும் வேளாளர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும்.

இத்தகைய நீதிநெறிவழுவா அறுதொழில்களினை நடாத்துவோர் தேசத்தில் பொன்பொருள், விளைவு, பற்பலதானியவிளைவு, கொலைபாதகச் செயலற்று வாழ்தல், களவு முதலிய வஞ்சகமற்ற வாழ்க்கை, கொள்ளை நோய் உபத்திரவமற்ற சுகம், ஆற்றலும் அமைதியமாகிய ஆனந்தத்தில் வாழ்வார்களென்று அறுவகை நன்னாட்ட மதியையும் வகுத்துள்ளார்கள்.

நீதிவழுவா புத்தராம் பிரம்மனிநின்று தோற்றியவர்களெனக் கூறுவோர் செய்யுந் தொழிற்பெயர்கள் யாவும் நன்மார்க்கத்தில் நடந்து நன்முயற்சியிலிருந்து நல்லூக்கம்நிலைத்து நன்மெய்க்கடைபிடித்து சகல மனுக்களும் சுகச்சீர்பெற்று நித்தியானந்த வாழ்க்கை அடைவதற்காக வகுத்திருந்தார்கள்.

அத்தகையப் பேரானந்த ஞானத்தின் கருத்தும் நித்தியானந்த வாழ்க்கையின் செயலும், தொழில்களுக்காய சீர்திருத்த சிறப்பின் பெயரும் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்க்கு விளங்காதிருப்பினும் வேஷப்பிராமணர்களால் ஒற்றுமெய்க்கெட்டு பிரிவினைகளுண்டாய கேடுகள் போதாது தொழில்களுக்கென்று சமணமுநிவர்களால் வகுத்திருந்தப் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் சாதிப் பெயர்களாக மாற்றி அதில் தங்களை சகல சாதிகளுக்கும் மேலாய உயர்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டு தங்களது பொய்போதகங்களுக்கும், மாறுவேஷங்களுக்கும் உட்படாது பராயர்களாக விலகி இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்க்குரு போதங்களையும் குடிகளுக்குப் பறைந்துவந்த விவேகமிகுத்த மேன்மக்களாம் பெளத்த உபாசகர்களை சகல சாதிகளுக்கும் தாழ்ந்தசாதி பராயரென்றும் பறையரென்றுங் கூறி பலவகையாலுங் கெடுக்கத்தக்க ஏதுக்களைச் செய்துக்கொண்டார்கள்.

ஒவ்வொருவர் தொழில்களையும் நீதிவழுவாமல் நடத்துவதற்கு புத்தபிரானாம் பிரம்மனின் உருவையே பீடமாக்கி அவரது முகத்திலும், புஜத்திலும், துடையிலும், பாதத்திலும் பிறந்தவர்களென சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில்களையும் நீதிவழுவா சிறப்புடன் நடத்துவதற்கும், குடிகள் சுகம்பெற்ற வாழ்க்கை அடைவதற்கும் வகுத்திருந்த தொழிற்பெயர்களை வேஷப்பிராமணர்கள் தங்களது சுயப் பிரயோசனத்தைக் கருதி தங்கள் வேஷத்தை சிறப்பித்து அதிகாரப் பிச்சை ஏற்றுண்பதற்காகக் கல்வியற்றக் குடிகளிடம் நீதி வழிகளில் நடப்பதற்காக வகுத்திருந்தத் தொழிற்பெயரை அநீதிவழியாம் சாதிப்பெயரென மாற்றி அதில் தாங்கள் பிரம்மாவின் முகத்திற் பிறந்த உயர்ந்த சாதியென்று வகுத்துக்கொண்டு பிள்ளை பெண்டுகளுடன் சோம்பேறி சீவனத்தைப் பெருக்கிக்கொண்டார்கள்.