பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 623


புத்தபிரான் பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தை தகனஞ் செய்தபின்னர் அச்சாம்லை புத்த சங்கத்தோர்களும் பெளத்த அரசர்களும், பௌத்த உபாசகர்களும் எடுத்துவைத்துக்கொண்டு அவற்றிற்கு மகாபூதி என்னும் பெயரளித்து அதிகாலையிலெழுந்து குருவை சிந்தித்து நீதிவழுவா நடையில் நடப்பதற்காகத் தங்கள் தங்கள் நெற்றிகளில் புத்த, தன்ம, சங்கமென மூன்று கோடுகள் இழுத்துப் பூசிவந்ததுடன் அவரது ஏகசடையையுங் கத்தரித்து வெள்ளிகூடுகளிலும், பொன் கூடுகளிலும் அடக்கிவைத்து லய அங்கமென்றும், அங்கலயமென்றும், இலங்கமென்றுங் கூறி தங்கள் கழுத்துகளிலுங் கட்டிக்கொண்டார்கள். சித்தார்த்தரை தகனஞ் செய்த மகாபூதியென்னுஞ் சாம்பல் முகிந்துவிட்டபோது அவ்வழக்கம் மாறாது நெற்றியிலிடுவதற்கு எங்குங் கிடைக்கக் கூடிய சாணச்சாம்பலை விபூதியென்று வழங்கிவந்தவற்றை சில பெளத்த உபாசகர்கள் எங்கும் கிடைக்கக்கூடிய சாம்பலை நெற்றியில் அணைவதும் பல பெளத்த உபாசகர்கள் மகாபூதியென்னும் சாம்பல் தீர்ந்துவிட்டவுடன் நெற்றியில் ஒன்றும் பூசாமலும் நிறுத்திவிட்டார்கள்.

இவற்றைக் கண்ணுற்றுவந்த வேஷப்பிராமணருள் ஒருவர் நீலகண்ட சிவாச்சாரியென்று தோன்றி சிவனென்னும் ஓர் தெய்வமுண்டென்றும், அவருக்கு மடியிலோர் மனைவியும், சிரசிலோர் மனைவியும் உண்டென்றும் என்றுந் துடைமீதிருக்கப்பட்ட மனைவிக்கு யானைமுகப்பிள்ளையொன்றும், ஆறுமுகப் பிள்ளையொன்றும் தனது வியர்வையினால் உண்டு செய்த வீரபத்திரனென்னும் பிள்ளை ஒன்றும் உண்டென்னுங் கதைகளை வகுத்துக்கொண்டு காலத்தைக் குறிப்பதற்கு சமயங்களென்று வகுத்துள்ள மொழியையும் தன்னையறிந்து அடங்குவதற்கு சைவமென்று வகுத்த மொழியையும் எடுத்துக்கொண்டு சிவனைத் தொழுவோர்கள் யாவரும் சைவசமயத்தோரென வகுத்து நூதனசமயமொன்றை உண்டு செய்து அதனாதரவால் சில சோம்பேறி சீவனங்களை உண்டு செய்துக் கொண்டார்கள்.

அது எத்தகைய சீவனங்களென்னில்:-

இந்திரர்தேச முழுவதும் இந்திரராம் சித்தார்த்தரது உருவம் போன்ற யோகசயன நிருவாண சிலைகளும், யோகசாதன சிலைகளும், போதனாரூப சிலைகளுஞ் செய்து அந்தந்த மடங்களில் ஸ்தாபித்து வைத்துக்கொண்டு தங்கள் தங்கள் தாய்தந்தையர் இறந்துவிட்டபின் அவர்களது அன்பு மாறாது அவர்களது இறந்தநாளைக் கொண்டாடி வந்ததுபோல் சத்திய சங்கசமண முநிவர்களும், உபாசகர்களும் மற்றும் பௌத்த குடிகளும் புத்தபிரான் பிறந்தநாளையும், அவர் அரசை துறந்த நாளையும் அசோகமரத்தடியில் சோகமற்று நிருவாணமுற்ற நாளையும், காசி கங்கைக்கரையில் சுயம்பிரகாசப் பரிநிருவாணம் பெற்ற நாளையும் மிக்க அன்புடனும் ஆனந்தத்துடனுங் கொண்டாடி அவரது போதனாவுருவங்களை நோக்குங்கால் நீதிபோதனைகளை சிந்தித்தும், அவரது யோகசாதன உருவங்களை நோக்குங்கால் தங்கள் தங்கள் யோகசாதனங்களில் நிலைத்தும், நீதிநெறி ஒழுக்கங்களில் சுகித்திருந்தார்களன்றி அவரது உருவச்சிலைகளை நோக்கி, எங்களுக்கு தனங் கொடுக்கவேண்டும், தானியங் கொடுக்கவேண்டும், சந்ததி கொடுக்கவேண்டும், பிணிகளை நீக்கவேண்டும், மோட்சமளிக்கவேண்டுமென சிந்தித்து அச்சிலைகளுக்குப் பூசை நெய்வேத்தியஞ் செய்யமாட்டார்கள்.

காரணமோவென்னில், புத்த தன்மத்தின்படி தனம் வேண்டியவர்கள் வித்தையையும், புத்தியையும் பெருக்கி தங்களது விடாமுயற்சியால் தனம் சேகரிக்கவேண்டுமேயன்றி எந்த தேவனுந் தனங்கொடுக்க மாட்டார். தானியம் வேண்டுவோர் விடாமுயற்சியால் பூமியைப் பண்படுத்தி நீர்வள வழிகளைத் தேடி பயிர்களைப் பாதுகார்த்து கதிருகளை ஓங்கச் செய்து தானியத்தைப் பெறவேண்டுமேயன்றி எந்ததேவனுந் தானியங் கொடுக்கமாட்டார். சந்ததி வேண்டுவோர் புருஷர்களுக்குள்ள சுக்கில தோஷங்களையும், இஸ்திரீகளுக்குள்ள சுரோணித தோஷங்களையும் நீக்கிக்கொண்டால் சந்ததியுண்டா மேயன்றி எந்த தேவனும் சந்ததி கொடுக்கமாட்டார். தங்களுக்குத் தோன்றும்