பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

630/அயோத்திதாசர் சிந்தனைகள்

தந்திரோபாயமாக யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு பிராமணர், பிராமணரென தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொண்டு வரும்படியான வார்த்தையும் அதற்குத்தக்க நடிப்பும் தங்கள் சீவன ஏதுக்களுக்குத் தக்க வடமொழி சுலோகங்களையும் ஏற்படுத்திக்கொண்டு கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து பிச்சையேற்றுண்பதுமன்றி இருஷிகளின் உற்பத்தியை எவ்வாறு வரைந்துகொண்டனரென்னில் பூர்வ மெய்ஞ்ஞானிகளாகும் கௌதமர், கலைக்கோட்டார், மச்சமுனி, கார்க்கேயர், சௌனகர் முதலியவர்களின் பெயர்களைக்கொண்டே கெளதமர் பசுவின் வயிற்றிலும், கலைக்கோட்டார் மான்வயிற்றிலும் பிறந்தார்களென்னும் வடமொழி சுலோகங்களை வகுத்துக்கொண்டு மக்கள் சந்ததியில் புருடவகுப்பை முதற்கூறுவதொழித்து பெண்களை முதற்கூறி வண்ணாத்தி வயிற்றிலும், வேடச்சி வயிற்றிலும், பறைச்சி வயிற்றிலும் பிறந்தார்களென்று ஏற்படுத்திக்கொண்டு வண்ணாத்தியென்னும் பெயரும், வேடச்சியென்னும் பெயரும் பூர்வத்திலிருந்து வழங்கிவருவதுபோல இப்பறையன் பறைச்சி யென்னு மொழியும் பூர்வமுதல் வழங்கிவருகிறதென்று ரூபித்து பௌத்த சங்கத்தோர்களையும், உபாசகர்களையும் இழிவுபடக்கூறி விவேகமிகுத்த மேன்மக்களைக் கீழ்மக்களாகவும், நாணாவொழுக்கினராகி பிச்சையேற்றுண்ணும் மிலேச்சக்கீழ் மக்களாந் தங்களை உயர்த்தி தங்களது பிராமணவேஷத்தை மெய்ப்படுத்திக் கொள்ளுவதற்கே இந்த சுலோகத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்களென்று கூறியவுடன், அரசன் திடுக்கிட்டு சேஷனென்பவனைநோக்கி, ஐயா தாம் கூறிய “ஸம்சம்பூதோ” வென்னும் வடமொழிக்கு தென்மொழியில் “பறைச்சி” யென்னும் பொருள் எவ்வகையாற் பெற்றிருக்கின்றது, அவற்றை விவரிக்க வேண்டுமென்று வினவினான்.

அவற்றை வினவிய புருசீகர்கள் மூலைக்கொருவராக எழுந்து பலவாறு உளறுங்கால் சங்காதிபர் சாம்பவனார் எழுந்து நந்தனைநோக்கி அரசே, தன்னை ஆய்ந்தறியா அறிவிலிகளும், நிலையற்றவர்களும், வேதமொழியின் விவரமறியாதவர்களும், சீலமற்றவர்களும், நாணா ஒழுக்கினர்களுமாகிய மிலேச்சர்கள் எம்மெய் நோக்கிப் பறையனென்றும், வெட்டுவோனென்றும் இழிந்தோனென்றுங் கூறிய விடும்பு மொழிகள் அவர்களது பொறாமெயாலும், பகுத்தறிவற்றப் பாங்கினாலுங் கூறினார்களன்றி வேறன்று.

சுக்கில சுரோணிதத்தால் உதித்த ஒவ்வோர் மனிதனும் தனக்குறைவால் குழிவெட்டவும், தனமிகுதியால் பல்லக்கேறவும், தனமும் பலமு மிகுத்தால் அரயனாகவும், தனமும் விவேகமு மிகுத்தால் ஞானியாகவும் விளங்குவான். அங்ஙனமின்றி பிச்சையேற்று நாணமறத் திரிவோனைப் பெரியோனென்றும், நாணமும் ஒழுக்கமும் உழைப்பும் மிகுத்தோனைத் தாழ்ந்தவனென்றும் கூறும்படியான அவிவேகச் செயலால் பஞ்சஸ்கந்தங்களின் பாகுபாடுகளும், பஞ்ச இந்திரியக் கூறுகளும், திரிகரண சுத்தங்களும், முக்குணத்தின் ஒழிவுகளும், சகல மனுக்களுக்கும் பொருந்தவிருக்குமேயன்றி ஒருவருக்கொருவர் மாறுபட விளங்காது.

இவற்றுள் ஒவ்வொரு மனிதனும் தனது துஷ்டச் செயலால் துட்டனென்றும், நற்செயலால் நல்லோனென்றும் அதாவது தீச்செயலால் தீயனென்றும், நற்செயலால் நியாயனென்றும் அழைக்கப்படுவான். தீயச்செயலுள்ளவர்களை நியாயரணுகார்கள். நியாயச்செயலுள்ளோருக்குத் தீய ரஞ்சுவார்கள். இது நீதி நூற்களின் போதனையும் சம்மதமுமாகும். அங்ஙனமின்றி நீதியும், நெறியும், வாய்மெயுமிகுத்தப் பெரியோர்களை தீயரென்றும் நீதியற்றும், நெறியற்றும், வாய்மெயற்றும் பொருளாசை மிகுதியால் நாணா வொழுக்கினராயுள்ள மிலேச்சர்களை நாயரென்றுங் கூறித் திரியும் மாறுபாடுகளை விளக்கிவந்தும் அரசனுக்கு அவைகள் சரிவர விளங்காததினால் நத்தனாரைநோக்கி ஐயா இச்சபையில் தத்துவோற்பத்தி யோகசாதனம், பஞ்சகல்ப முதலியவைகளை நான் தெரிந்துகொண்டபோதினும் வடமொழியில் பிராமணனென்று சொல்லும்படியான வார்த்தையின் உற்பவமும் அக்கூட்டத்