பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/ 637

புருஷன் இறந்துபோவானாயின் பெண்சாதியானவள் வேறுவிவாகஞ் செய்துக்கொள்ளாமல் புருஷன் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை வருஷந்தோரும் எங்களை யொத்த பிராமணர்களுக்கு தானமளித்து வருவாளாயின் அவள் புருஷன் மோட்சத்தை அடைவான். அப் பெண்ணானவள் விருத்தாப்பியம் அடைந்துவிடுவாளாயின் மிகுந்துள்ள சொத்துக்கள் யாவையும் எங்கள் உத்திரவினால் கட்டிவைத்துள்ள சிலாலயத்தின் பெயரால் சிலாசாசனஞ் செய்துவைத்துவிடுவாளாயின் அவளிறந்தபின் மறுபிறவியுண்டாகி தன்புருஷனுடன் சேர்ந்துவிடுவாளென்றும், எங்களை ஒத்த பிராமணர்களுக்கே தானியமளித்து பிராமணர்களுக்கே பொருளீய்ந்து வருகிறவன் மறுபிறவியில் பூமிசெல்வத்தையும், தானியமளிப்பவன் தானிய சம்பத்தையும், பொருளளிப்பவன் தனசம்மந்தனாகப் பிறப்பான். எங்கள் வாக்கையே தெய்வவாக்காகவும், எங்களையே தெய்வமாகத்தொழுது எக்காலமும் எங்கள் பெண் பிள்ளைகளுக்கு தானமளித்து வருவீர்களாயின் பிறவியின் துக்கமற்று முத்திப் பெறுவீர்கள்.

எனப் பிறவியின் பேதாபேதங்களும் அவரவர்கள் கன்மத்திற்குத் தக்கவாறு நிகழும், பிறவியினது தோற்றங்களும் இவ்வேஷப்பிராமணர்களுக்கு விளங்காவிடினும் பிறவி என்னும் வார்த்தையைக் கொண்டே கல்வியற்றக் குடிகளை வஞ்சித்தும் பயமுறுத்தியும் பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள்.

இத்தகையப் பொய்க்குருக்களின் செயலால் நாளுக்குநாள் விவேக விருத்தியற்று அவிவேக மிகுத்துக் குடிகள் சீரழிந்துவரவும் வேஷப் பிராமணர்கள் விருத்தியுற்றோங்கவுமுள்ளதன்றி வீடுகடோருங் கூழாங்கற்களைக் கும்பிட்டுக்கெடும் ஏதுக்களையுஞ் செய்துவிட்டார்கள்.

அதாவது, வேஷப்பிராமணர்களை அடுத்த அரசர்கள் மடிந்தபோது அவர்களைப் போன்ற கற்சிலைகள் அமைத்து அவர்களைத் தொழுதுவரும் சிலாலயங்களை அமைத்து வருவது போதாமல் வீடுகடோருங் கூழாங்கற்களைத் தொழும் வகையை எவ்வகையாய்ச் செய்துவிட்டார்களென்னில்,

வியாரங்களில் தங்கியுள்ள அறஹத்துக்களை நாடிச்சென்ற உபாசகர்கள் அவர்களை வணங்கியவுடன் திராவிட பாஷையில் “அறிவு பெருகுக” வென்றும், மகடபாஷையில் “சாலக்கிரம” மென்றும் ஆசிர்வதிப்பது இயல்பாம். சாலக்கிரமம் என்னும் மொழியின் பொருள் யாதென்னில் எக்காலும் நீதிவழுவா நெறியில் நில்லுங் கோளென்பதேயாம். இம்மொழியை யதார்த்த பிராமணர்களிடம் கேட்டிருந்தக் கல்வியற்றக் குடிகள் இவ்வேஷப் பிராமணர்களை அடுத்து சாலக்கிரமங் கூறுவீர்களே இதை ஏன் கூறுகிறதில்லையென்று கேட்பார்களாயின் அம்மொழியின் சப்தமும் அதன் பொருளும் அறியாதவர்களாயிருப்பினும் மிக்க அறிந்தவர்போல் அபிநயித்து வந்தவர்கள் ஆற்றங்கரைக்குச் சென்று அவ்விடந் தேய்ந்து பளபளப்புற்று சிவந்த கோடுகள் பரந்துள்ள சிறிய குழாங்கற்களை எடுத்துவந்து மிக்க தனமாக புஷ்பத்திற் சுருட்டி கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் அடுத்து, இதோ பார்த்தீர்களா இதற்குதான் சாலக்கிரமமென்று கூறுவது, இதனை வீடுகளில் வைத்து பூசிப்பீர்களானால் நீங்களெண்ணும் பொருட்களெல்லாம் உங்களுக்குக் கிடைப்பதுடன் கோரியவண்ணம் முடியும். சகசம்பத்தாக வாழ்வீர்கள், இதற்கு மதிப்பு சொல்ல ஒருவராலும் இயலாது, எவ்வளவு திரவியத்தைக் கொட்டினுங் கிட்டாது. சாலக்கிரமங்களில் இது விசேஷித்த சாலக்கிரமமெனக்கூறி பொருள் பறித்து தின்பதற்கு சாலக்கிரமமென்னும் வாழ்த்தல் மொழியும் சீவனத்திற்கோர் வழியாகிவிட்டது.

கிராமங்கடோரும் சிலாலயங்களை வைத்து பூசிப்பது போதாது வீடுகடோருங் குழாங் கற்களை வைத்துப் பூசிக்கும் ஏதுக்களை செய்துவிட்டு வீடுகடோருஞ் சென்று பொருள்பறிக்குமோர் ஏதுவையும் உண்டு செய்துக் கொண்டார்கள். “சாலக்கிரமம்” எக்காலுங் கிரமமான வாழ்க்கைப் பெற்றிருங்கோளென்னும் வாழ்த்தல் மொழி கூழாங்கல்லாகிவிட்டதென்ற உடன் சபா