பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 663


அவ்வழியே செல்லுவதற்கு பயந்து வேறுவழி சென்றிருந்தவர்களும், ஆடுமாடுகளை விடுவதற்கு பயந்திருந்தவர்களும் அன்றே ஆனந்தமாக செல்ல ஆரம்பித்துக் கொண்டார்கள்.

மணிவண்ணன் வீரத்தில் வல்லமெயுள்ளவனாயிருந்தும் ஏழைகளுக்கு ஈவதில் வரையாது கொடுக்கும் வள்ளலாகவு மிருந்தான். ஜலக்கிரீடையில் எண்ணாயிரம் முல்லைநில ஸ்திரிகளைக் கொண்டுபோய் நீர் விளையாடுவதுடன் அவர்களை அறியாது வஸ்திரங்களைக் கொண்டுபோய் புன்னை மரத்திற் கட்டிவிட்டு கெஞ்சி விளையாடச் செய்வதுமாய லீலா வினோதனாகவும் இருந்தான்.

மணிவண்ணன் கொண்டல் வண்ணல், கருடவாகனனென வழங்கப் பெற்றவன். கிரீடை வல்லபத்தால் கிரீட்டினன் கிரீட்டினனென்னும் மறு பெயரையும் பெற்று சில நாள் சுகித்திருந்தான். அவனது ஈகையின் குணத்தையும் அன்பையுங் கண்ட குடிகள் யாவரும் அவனை மணிவண்ண தெய்வமென்றுங், கருடவாகன தெய்வமென்றும், கிரீட்டின தெய்வமென்றுங் கொண்டாடி வருங்கால் மணிவண்ணனும் மற்றுமுள்ளோரும் அறப்பள்ளி அடைந்து ஆனந்த விசாரிணையில் ஆழ்ந்துவிட்டார்கள்.

அவர்கள் அறத்து நிலையடைந்த முன்னூறு வருடங்களுக்குப்பின் அதே கார்வெட்டி முல்லை நிலத்தில் வந்துசேர்ந்த ஆரியவேஷப்பிராமணர்களுள் வியாசாச்சாரி என்னப்பட்டவன் தங்களுக்கென்று சில பூமிகளைக் கைப்பற்றி முல்லை நிலத்தோர் வைத்துள்ளப் பாடியென்னும் பெயரைப் போல் அப்பூமிக்கு வியாசர்பாடி என்னும் பெயரைக்கொடுத்து சகலராலும் வழங்கச்செய்து அவ்விடமே யாசகசீவனஞ் செய்துவருங்கால் அத்தேச பௌத்தர்கள் மணிவண்ணனென்னுங் கிரீட்டினனைக் கொண்டாடிவருவதைக்கண்டு கிரீட்டினனென்னும் பெயரை கிருட்டன் கிருஷ்ணன் என மாற்றி வேறோர் கற்பனையை உண்டு செய்து அக்கிருஷ்ணனும் கருடன் மீதேறினான், அக்கிருஷ்ணனும் ஓர் சர்ப்பத்தைக் கொன்றான், அக்கிருஷ்ணனும் பன்னீராயிரம் ஸ்திரீகளுடன் லீலைபுரிந்து அவர்கள் ஆடைகளை புன்னைமரத்திற் கட்டினானனென வரைந்து அத்தேசப் பூர்வ சரித்திரம்போற் காட்டி மேலும் மேலுங் கற்பனை கதைகளை வரைந்து தங்களை சிறப்பித்துக்கொண்டார்கள். எவ்வகையாலென்னில்:-

பெளத்தருக்குள் கர்ணராஜன் சரித்திரமொன்று எழுதிவைத்திருந்தார்கள். கர்ணராஜனது ஈகையின் மகத்துவத்தையும் அதன்பின் பங்காளிகளுக்குள் பாகவழக்கு நேரிட்டு ஒருவருக்கொருவர் அஸ்திநாதபுறமென்னும் குருவின் க்ஷேத்திரத்தில் கலகமிட்டுத் தாங்கள் மடிந்ததுமன்றி தங்களை அடுத்த அரசர்களையும் அவர்களது சந்ததியோர்களையுங் கூட்டி மடித்துவிட்டார்கள். அக்கதையை பெளத்த உபாசகர்கள் குடிகளுக்குப் போதித்து ஈகையில் கர்ணராஜனைப் போலிருக்கவேண்டிய நிலையை விளக்கி வந்ததுமன்றி பேராசையால் பெருந்துக்கம் நேரிடுமென்பதை விளக்குவதற்காக பூமியின் பாகவாசையால் சகோதிரர் களுக்குள் நேரிட்ட கலகத்தையும் அதனால் சகலரும் மடிந்த கோரத்தையும் விளக்கி லோபகுணத்தை நீக்கி ஈகையைப் பெருக்கும்படியான வழியில் நிலைக்கச்செய்துவந்தார்கள்.

அதே கதையை இவ்வியாசாச்சாரி பீடமாகக்கொண்டும், பகவன் சைன பர்வதத்தில் எழுதிவைத்திருந்த தசபார மிதையென்னும் தச சீலத்தைப் பெயராகக் கொண்டும் இக்கதை வினாயகனால் மலையிலெழுதியிருக்க, பாரதமென்றுங் கூறி, கர்ணராஜன் சரித்திரத்தையும் அவனது பிறப்பு வளர்ப்பையும் இயற்கைக்கு விரோதமாகக் கூட்டியுங் குறைத்தும் எழுதி அக்கதைக்கு ஆதார புருஷன் கிருஷ்ணனென்றும் வரைந்து கார்வெட்டிநகர் கிரீட்டினன் கதையைக் கால்மாடு தலைமாடாக மாற்றிவிட்டான்.

கார்வெட்டிநகர் அரசனின் சரித்திரத்தை நன்குணர்ந்துள்ள பௌத்தர்கள் ஈதேது புதுசரித்திரமாகக் காணப்படுகின்றது, பூர்வசரித்திரத்திற்கும் இதற்கும் மாறுபடுகின்றதேயென்று கூறுவார்களாயின் வியாசாச்சாரி அவர்களுக்கு யாது