பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 / அயோத்திதாசர் சிந்தனைகள்

என்னில் சீர்திருத்தம் என்னும் பூமியை ஒற்றுமெய் என்னும் கலப்பையால் உழுது, சாதிகள் என்னும் கல்லுகரடுகளையும் சமயங்கள் என்னும் களைகளையும் பிடுங்கி, சமுத்திரத்தில் எறிந்துவிட்டு சகோதர ஐக்கியமென்னும் நீரைப்பாய்த்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை என்னும் வரப்பை உயர்த்தி, ஊக்கம் விடாமுயற்சி என்னும் எருவிட்டு, சருவசாதி சமரசம் என்னும் பரம்படித்து, இங்கிலீஷ் கல்வி, ஜப்பான் கைத்தொழில், அமேரிக்கன் அபிவிருத்தி பாவனை என்னும் விதைகளை ஊன்றி, அவன் சின்னசாதி இவன் பெரியசாதி எனக் குரோதம் ஊட்டும் சத்துருக்களாகிய பட்சிகள் நாடாவண்ணம், சகலரும் சுகமடையவேண்டும் என்னும் கருணை என்போனைக் காவல் வைத்து கல்வி, கைத்தொழில், யூகம் என்னும் கதிர்களை ஓங்கச்செய்யின் அதன் பலனால் நாமும் நமது குடும்பமும் நமது கிராமவாசிகளும் நம் தேசத்தோரும் சீர்பெறுவதுடன் தேசமும் சிறப்படையும்.

இத்தகைய சீர்திருத்தங்களை முதனோக்காது கனவான்களும் கல்வியாளரும் ஒன்றுகூடி சுதேசியம், சுதேசியம் என்னும் பெருங்கூச்சலிட்டுப் பணங்களைச் சேர்த்து மயிலாப்பூர் பொக்கிஷச்சாலை, திருவல்லிக்கேணி பொக்கிஷச்சாலை, வைத்திருக்கும் சுதேசிகளை நம்பாமல் ஆர்.த்நட்டை துடர்ந்த காரணமென்னோ. நம்மை நாம் நம்பாமைக்குக் காரணம் நமது செய்கை என்றே தீர்த்தல் வேண்டும்.

- 1:2; சூன் 26, 1907 -

தம்முடையச் செயல்களில் வித்தையின் பூரிப்பால் விழியில் கண்ணாடியிட்டு விளித்து நிற்பதும், சாதியின் பூரிப்பால் சாக்கடை நாற்றமறியாது சம்பிரதாயம் பேசுவதும், தனத்தின் பூரிப்பால் தன்னினம் பாராது தத்துவங் கூறுவதும், மதத்தின் பூரிப்பால் மல்லாந்துமிழ்ந்து மார்பை எச்சமாக்குவதும் ஆகியச்செயல்களை ஆராயுங்கால் கண்டு படிப்பது வித்தை, கொண்டுகாப்பது சாதி, விண்டுயீவது தனம், பண்டைகாப்பது மதமென்னும் உணர்வற்று, பி.ஏ. எம்.ஏ., முதலிய கெளரதா பட்டங்களைப் பெற்று தேச சீர்திருத்தங்களுக்கு ஆரம்பித்தவர்கள் தாங்களே முன்னின்று காரியத்தின்பேரிற் கண்ணோக்கம் வைத்து காரியாதிகளை முடிக்காமல் கலாசாலை சிறுவர்கள் பக்கமும் சீர்திருத்தத்தை விடுத்தபடியால் கன்றுகள் கூடி களம்பரிப்பதுபோல் தங்கள் சொந்த படிப்பையும் மறந்து வந்தேமாதரங்கூறி பந்துக்களைக் கண்கலங்கச் செய்துவிடுகின்றார்கள், இத்தகைய ஏதுக்களுக்குக் காரணம் யாரென்றால் சுதேச சீர்திருத்தக்காரர்களேயாம்.

இவ்வகைசீர்திருத்தக்காரர்கள் கலாசாலை மாணவர்களைக் கொண்டு சீர்திருத்தம் செய்யவேண்டுமானால் சிற்றரசர்களையும் ஜமீன்களையும் ஒன்றுகூட்டி பணங்களைச் சேர்த்து மாணவர்களை பிரவேசப்பரிட்சை மட்டிலும் வாசிக்கச்செய்து வியாபார யுந்தாதிகளையும், வியாபாரக் கணிதங்களையும், பதியவைத்து நமது தேசத்தில் அன்னிய தேசங்களிலிருந்து வந்து பென்னி கம்பனியென்றும், பெஸ்ட் கம்பனியென்றும் ஓக்ஸ் கம்பனியென்றும் வைத்துக் கொண்டு தங்கள் தேச சரக்குகளைக்கொண்டு இவ்விடத்தில் விற்பதும் நம்முடைய தேச சரக்குகளைக் கொண்டுபோய் அவர்களுடைய தேசத்தில் விற்பதும் ஆகிய செயல்களைப்போல் நாமும் நம்முடைய மாணவர்களுக்குப் பொருளுதவிச்செய்து அமேரிக்கா, ரோம், ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலிய தேசங்களுக்கு அனுப்பி இராமசாமி கம்பனி, முத்துசாமி கம்பனி, பொன்னுசாமி கம்பனி என்னும் ஒவ்வோர் கம்பெனிகளை ஏற்படுத்தி அத்தேசச் சரக்குகளை பிடித்தனுப்பி நமது தேசத்தில் விற்கவும் நமது தேசத்து சரக்குகளைக் கொண்டுபோய் அத்தேசங்களில் விற்கவும் அந்தந்த கம்பனிகளின் ஆதரவில் மாணவர்களை அனுப்பி வித்தைகளைக்கற்று வரச்செய்யவும் முயற்சிப்பார்களானால் அன்னியதேசங்களில் மாடமாளிகைகள் கூடகோபுரங்களுயர்ந்து சிறப்பதுபோல் நமது தேசமும் சிறப்புற்று விளங்கும். சீர்திருத்தக்காரர்கள் காரியத்தின் பேரில் கண்ணோக்கம் வைக்காமல் வீரியத்தின் விருதுகட்டிக்கொண்டு அன்னியதேச சரக்குகளை வாங்கக் கூடாதென்று