பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /717

குடிகளும் அவ்வழியென்னும் முது மொழிக்கிணங்கக் குடிகளும் சாதிகேடு மதகேடுகள் என்பதின்றி அவரவர்கள் அந்தஸ்திற்குத் தக்கவாறும் வித்தைக்குத் தக்கவாறும் ஒற்றுமெக்கேடின்றி ஒருவர் வித்தையை மற்றவருக்குக் கற்பிக்கவும் ஒருவருக்குள்ள பொருளை மற்றவருக்கு உதவி செய்யவும் பயனைக் கருதாது ஈகையில் நிலைத்து சகல மக்களும் தங்களைப் போல் சுகம்பெற்று வாழ்கவேண்டுமென்னும் கருணையும் அன்பும் பெருக வாழ்ந்து வந்தார்கள். அதனால் இந்தியமக்கள் யாவருஞ் சுகச்சீர் பெற்று வித்தியாவிருத்தியிலும் விவசாய விருத்தியிலுங் கண்ணோக்கமுடையவர்களாய் ஆனந்தத்திலிருந்தார்கள்.

அவ்வழிகொண்டு சகல வித்தைகளும் பெருகி மக்களும் சுகமுற்று தேசமும் சிறப்புற்றிருந்தபடியால் அக்காலத்திய அன்னியதேச விவேகிகள் யாவரும் இந்தியதேசம் வந்து அவரவர்களுக்கு வேண்டிய வித்தைகளைக் கற்றுக்கொண்டு போனார்கள் என்பதற்குப் போதிய சரித்திர ஆதாரங்களும் உண்டு. இவற்றுள் ஒருமனிதனின் பூர்வகுல சிறப்பை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவனுக்குள்ள நல்லொழுக்கம் நன்னீதி, நல்வாழ்க்கை சீவகாருண்யம் அன்பு குலாபிமானம் முன்னேற்றம் முதலிய செயல்களால் அறிந்துக் கொள்ளலாம். அதுபோல் ஒரு தேசத்தின் பூர்வ சிறப்பை அறிந்துக்கொள்ளவேண்டுமாயின் பூர்வக் கட்டிடங்களினாலும் பூர்வ முதநூல், வழிநூல், சார்புநூற்களாலும் எளிதில் அறிந்துக் கொள்ளலாம். அதுகண்டு கருணை தங்கிய ராஜாங்கத்தார் பூர்வ தட்டிட பரிசோதகர்களைக்கொண்டு சோதிப்பவற்றுள் சிற்பா சாஸ்திரிகளின் வல்லபமும் புத்தியின் விசாலமும் ஒற்றுமெயின் செயலும் எளிதில் விளங்கி வருகின்றது. அவற்றிற்குப் பகரமாய் பௌத்த சித்தர்களும் ஞானிகளும் வித்துவான்களும் வரைந்துள்ள வைத்திய நூற்களும் ஞான நூற்களும் நீதி நூற்களும் கலை நூற்களுமே போதுஞ் சான்றாம்.

இத்தியாதி வித்தையும் புத்தியும் ஈகையும் சன்மார்க்கமும் ஒற்றுமெயும் நிறைந்திருந்த இந்திரர் தேசத்தில் சோம்பலும் பொறாமெயுமே ஓர் உருவாகவும் பொய்யையே ஒரு வித்தையாகவும் குடிகெடுப்பையே ஓர் புத்தியாகவும் வஞ்சினத்தையே ஓர் ஈகையாகவும், ஒரு குடி பிழைக்க நூறு குடிகளைக் கெடுப்பதே சன்மார்க்கமாகவுங் கொண்டொழுகும் வஞ்சினக் கூட்டத்தோர் வந்து தோன்றி தேசத்தோரிடம் பிச்சையிறந்துண்டே சீவனைக் காப்பாற்றிக் கொண்டதன்றி தேசத்தோர் செய் நன்றியை மறந்து தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய பொய் வேதங்களையும் பொய்ப் புராணங்களையும், பொய் மதங்களையும், பொய் தேவதைகளையும், பொய் சாதிகளையும் ஏற்படுத்தி அதில் தங்களை உயர்ந்த சாதிகள் என வகுத்துக் கொண்டு தங்களது பொய்யாயச் செயல்கள் யாவற்றிற்கும் எதிரடையாயிருந்து கண்டித்தும் அடித்து துரத்தியும் வந்த விவேகிகளாய மேன்மக்கள் யாவரையும் தாழ்ந்த சாதியாக வகுத்து அவர்களை எவ்வகையாலுந் தலையெடுக்க விடாமற் செய்துவந்தபடியால் தேசத்தின் ஞான பீடங்கள் அழிந்தும் வித்தியா பீடங்கள் ஒடிங்கியும் விவசாயத் தொழில்கள் நாசமடைந்தும் கருணை அன்பென்னும் சன்மார்க்கங்கள் ஒழிந்து ஒற்றுமெய்கேடுற்று தேச சிறப்புக்குன்றியும் மக்களது விவேக விருத்திக்கெட்டு பாழடைந்துகொண்டே வந்தது. அத்தகைய சீர்கேட்டிலேயே இதுகாருமிருக்குமாயின் சகல மக்களுக்குமுள்ள வித்தைகளுமற்று விதரணைகளுமற்று மக்கள் சீரழிவதுடன் தேசமும் சிறப்பழிந்து நாசமுற்றே நிற்கும். ஏதோ இவ்விந்திர தேசத்தோரின் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றி தேச சிறப்பும் மக்கள் சுகமும் பெறும்படியான வழிவகைகளுண்டாகிக் கொண்டே வருகின்றது. இது காலத்தில் பூர்வ இந்தியர்கள் யாவரும் ஒருவர் சொன்னதை நம்பித்திரியும் அஞ்ஞானத்தை ஒழித்து சுயக்கியானத்தில் நிலைத்து பிரிட்டிஷ் ஆட்சியே சகல அதிகாரங்களிலும் நின்று ஆண்டுவரவேண்டும் என்றாசித்து அவர்களே நம்மெக் காத்து ரட்சிக்கும் அரசர்களென விசுவாசித்துத் தங்கள் தங்கள் காரியாதிகளில் முன்னேறும் வழிவகையைத் தேடுவார்களாயின் பூர்வ இந்திய தேசம் இந்திரர் லோகமாகவே விளங்கும், இந்தியர்கள் யாவரும் சுகச்சீர் பெறுவார்கள்.