பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/773

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /725.

இவ்வைத்தியத்தையே அடக்கிவிடவேண்டுமென்று இராஜாங்கத்தோர் முன்னிலையில் சில சட்டதிட்டங்களைக் கொண்டு வந்துவிட்டார்கள். இராஜாங்கத்தோரோ நீதியும் நெறியும் நிதானமுமைந்த பேரறிவாளராதலின் அவற்றை அவர்களேற்காது குடிகளின் சார்பாகவே ஒழித்து வைத்திருக்கின்றார்கள். அதன் காரணமோ வென்னில் இத்தேசத்தியப் பூர்வக்குடிகள் யாவரும் காணும் வியாதிகளுக்கு அநுபவத்தின் பேரிலேயே சிற்சில கியாழங்களையும் அறைப்பு மருந்துகளையுங் கொடுத்து குணமாக்கிக் கொள்ளுவதியல்பாம், தேர்ந்த வைத்தியர்களைக்கொண்டு சுகமடைவதுங் காட்சியாம். அவைகளைக் கண்டுவரும் இராஜாங்கத்தார் இத்தமிழ் வைத்தியத்தையும் மகமதிய வைத்தியத்தையும் நிறுத்திவிடுவதாயின் சென்னை முநிசபில் எல்லைக்குட்பட்ட மனுக்கள் யாவருக்கும் ஜெனரல் ஆஸ்பிட்டலைப்போல் பத்து ஜெனரல் ஆஸ்பிட்டல் கட்டியபோதிலும் இடம் போதாதென்பது அவர்களுக்குத் திட்டமாகத் தெரியும் ஆதலின் வைத்திய சட்டத்தை சற்று கவனித்து வருகின்றார்கள்.

ஈதன்றி சுகாதாரத்தை நாடியே சட்டங்கள் தோன்றுமன்றி வேறில்லை ஆதலின் பூர்வவைத்தியர்கள் யாவரும் ஒன்றுகூடி பூர்வ வைத்தியத்தை சீருக்குஞ் சிறப்புக்குங் கொண்டுவருவார்களென்று நம்புகிறோம்.

- 7:39; மார்ச் 4, 1914 -