பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 31


- சுதேச சருக்கரையால் சுகமுண்டாகுமோ, இவர்களதை வாங்கப்போகிறதுமில்லை அதினாற் சுகமடையப்போகிறதுமில்லை.

அண்டைவீட்டுக்காரனும் அயல்வீட்டுக்காரியும் ஆர்பத்நாட்டில் பணத்தைப்போட்டு அடியோடு கெட்டதுபோல் சும்மாயிருந்த பணத்தை துர்த்தர் கையில் கொடுத்து சூதன் கொல்லையில் மாடுமேய்வதை சுற்றிப் பார்த்திருப்பதுபோல் சுகமற்றுப்போம்.

பூர்வம் இத்தேசத்தில் நல்வாய்மெய் - நற்சாட்சி - நற்கடைபிடி நல்லூக்கம் - நல்லுணர்ச்சி - நாகரீக மிகுத்திருந்த குடிகள் யாவருஞ் சீரழிந்து சிந்தை நைந்திருக்கின்றார்கள். சீரற்றிருந்த குடிகளிற் சிலர் நாகரீக முற்றிவருகின்றனர் இவர்கள் பெற்றுள்ள நாகரீகத்தால் சுதேசீயம் சீர்பெறுமென்பது சுத்த பிசகு. பூர்வம் நாகரீகத்திலிருந்து தற்காலம் சீரழிந்து இருப்பவர்கள் எக்காலம் சுகமுறும் வாழ்க்கைப் பெறுவார்களோ அக்காலத்தில்தான் சுதேசிய நாகரீகந்தோன்றி சுதேசப் பொருட்களை அநுபவிக்கும் சுகத்தைக் காணலாம். காரணம் சாதி பேத பொறாமெயும் சமயபேத பொச்சரிப்புமேயாம். சாதிபேதங்கொண்ட பொறாமெய் உள்ளோரிடம் சீவகாருண்ய சிந்தையே கிடையாது என்பதை அநுபவத்தில் காணலாம்.

அதாவது சென்ற மாதம் இராயப்பேட்டைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே ஓர் சிறுவன் மின்சார வண்டியில் சடுதியிலகப்பட்டு மரணமடைந்தான். அவனை சுற்றி நின்ற சுதேசிகள் அவனென்ன சாதிப் பையன், யார்வீட்டுப் பையன் என்று விலகி நின்றார்களன்றி நெருங்கினவர்கள் கிடையாது. யூரேஷிய இன்ஸ்பெக்ட்டர் ஒருவர் அப்பையனைத் தாவியெடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டுபோக நேரிட்டது. இவ்வகைச் செயலால் சுதேசிகள் என்போர் சீவ காருண்ணியரா, பரதேசிகள் என்போர் சீவகாருண்ணியரா, விவேகிகளே விளக்குவார்களாக.

சமயபேதப் பொச்சரிப்பைக் காண வேண்டுமாயின் தற்காலம் ஸ்ரீரங்கத்தில் நடந்துவரும் ஆழ்வார்சாமி வியாக்கியமே அத்தியந்தச் சான்றாம்.

- 1:15: செப்டம்பர் 25, 1907 -

இதுகாரும் எழுதிவருஞ் சுதேச சீர்திருத்தத்தை சிலர் சுதேச சீர்திருத்தமாகக் கொள்ளாது சுதேச மறுப்பென்றெண்ணி மயங்குவதாக விளங்குகின்றது.

நாம் சுதேசிகளைத் தாழ்த்தி பரதேசிகளை உயர்த்துவதற்கும், பரதேசிகளைத் தாழ்த்தி சுதேசிகளை உயர்த்துவதற்கும் பத்திரிகை வெளியிட்டோமில்லை. கதேசிகளை சொந்தமாகவும் பரதேசிகளை பந்துவாகவும் எண்ணி பலர்ப் பிரயோசனங் கருதி வெளியிட்டிருக்கின்றோம்.

சுதேசசுகத்தை நாடாது பரதேசிசுகத்தை நாடுதுமாயின் பரதேசிகளுக்குப் பல்லாண்டு கூறி அடியிற்குறித்த உபகாரங்களை அலங்கரித்திருப்போம்.

- அதாவது -

பி.ஏ, எம்.ஏ., முதலிய பட்டங்களைப் பெற்று பெருத்த உத்தியோகங்கள் அமர்ந்து பெண்சாதி பிள்ளைகளுடன் சுகித்து வாழும் படிப்பைக் கொடுத்தவர்கள் பரதேசிகளன்றோ. வீதியிற்சென்று உலாவுஞ் சுகமளித்தவர்கள் பரதேசிகளன்றோ. தீபசுகமளித்து தெருவுலாவச் செய்தவர்கள் பரதேசிகளன்றோ. சுத்தஜலமளித்து நித்த சுத்தமடையச் செய்தவர்கள் பரதேசிகளன்றோ. தூரதேச பந்துக்கள் சங்கதியை தந்தியாலறியச் செய்தவர்கள் பரதேசிகளன்றோ.

இருப்புப்பாதை வண்டியிலேறி விருப்பமுடன் செல்ல வைத்தவர்கள் பரதேசிகளன்றோ.

பாதரட்சையை சிலரணியலாம் சிலரணியலாகாவென்னும் பற்கடிப்பை போக்கி சகலரும் பாதரட்சையணிய சுகமளித்தவர்கள் பரதேசிகளன்றோ.

சகலரையும் வண்டி குதிரையேறி சுகமடையச் செய்தவர்கள் பரதேசிகள் அன்றோ.

பற்பல வியாதியஸ்தர்களுக்கும் மருந்தளித்து பாதுகாப்பவர்கள் பரதேசிகளன்றோ, என்று அவர்கள் அளித்துள்ள மற்றுஞ் சுகங்களை