பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அவ்வேஷமாவது புத்த சங்கத்தோருக்குள் விவேக மிகுதியால் சமண நிலை கடந்து உபநயனம் என்னும் ஞானக்கண்ணளிக்கப் பெற்றவுடன் மதாணிப் பூணுாலென்னும் பூணுநூல் அணைந்து உபநயனம் பெற்ற அடையாளங் குறித்திருந்தார்கள்.

இரண்டாவது, புத்த சங்கத்தில் சேராமல் குடும்பத்தில் இருந்துக் கொண்டு பஞ்சபாதகம் அணுகா வாழ்க்கையிலிருக்கும் குடும்பிகள் என்று அறிந்துக்கொள்ளுவதற்கு (குடுமி) வைத்தும், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிரசிலுள்ள முடி முழுதும் சிறைத்தும், குடும்பிக்கும் சங்கத்திற்கும் சம்மந்தமின்றி சங்கத்திற் சென்று ஞான விசாரிணைப் புரிதலும் குடும்பிகளிடம் வந்து புசித்தலுமாகிய ஓர் நிலையின்றி இரண்டுபக்கம் இடியுண்டவர்களுக்கு சிர முழுதும் முடிவளர்க்கச் செய்து இரு இடிகள் இருடிகளென வழங்கி வந்தார்கள்.

இவ்வகையாக அவர்கள் தொழிலுக்கென்றும் அவரவர்கள் அந்தஸ்தின் குறிப்பிற்கென்று வைத்திருந்த பெயர்களையுஞ் செயல்களையும் மாறுபடுத்தி வடகலை நூலின்றி தென்கலை நூற்கள் வழங்கிவந்த இன்னாட்டில் தாங்கள் கற்றுக்கொண்ட வடகலைநூற் சுலோகங்களிற் சிலவற்றைச் சொல்லி நாங்கள் தான் பிராமணர், நாங்கள்தான் அந்தணர் என்று சொல்லி சிலர் மொட்டையடித்துக் கொண்டும் சிலர் முடிவளர்த்துக் கொண்டும், சிலர் குடுமிவைத்துக் கொண்டும் கல்வியற்ற குடிகளை வஞ்சித்தும் அவர்களிடம் அதிகார யாசகஜீவனஞ்செய்துக் கொண்டு வந்தார்கள். இத்தகைய யாசகத்திலும் அதிகாரத்துடன் சில வடகலை நூற் சுலோகங்களைச் சொல்லிப் பொருள் சம்பாதிப்பதை உணர்ந்த இத்தேசத்து சோம்பேரிகளிற் சிலர் தாங்களும் பிராமணர்கள் என்று வேஷமிட்டுப் பொருள்பறிக்க ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட முன் வேஷபிராமணர்களுக்கும் பின் வேஷபிராமணர்களுக்கும் விரோதம் உண்டாகி பெண் கொடுக்கல் வாங்கலிலும், உண்பினையிலுஞ் சேராமல் மாறுபட்டு நின்றார்கள். இந்த அதிகாரப் பிச்சை வேஷத்தை அறிந்த மற்றும் சிலரும் பிராமணவேஷமிட்டு யாசக சீவனம் ஆரம்பித்ததினால் ஐயங்கார் பிராமணர், ஐயர் பிராமணர், ஆசாரி பிராமணர், பட்டர் பிராமணர் என நூற்றியெட்டு பிராமணர்கள் தோன்றி ஒருவருக்கொருவர் ஒற்றுமெயில்லாமல், மாறுபட்டு பூர்வத்தொழில்களையும் விட்டு புத்த தருமங்களையும் மறைத்து மடங்களையும் பாழாக்கி பௌத்தர்களையும் தாழ்ந்த சாதியாக வகுத்துவந்தார்கள். இத்தகைய மாறுதற் செய்கைகளினால் தாங்களுங் கெட்டு பௌத்தர்களையும் கெடுத்து வருங்கால் மகமதிய துரைத்தனத்தார் வந்து குடியேறினார்கள்.

அம்மகமதியரரசாங்கத்தோர் இதுவரையில் தங்கள் ஆளுகையை நிறைவேற்றி வருவார்களாயின் வேஷபிராமணங்கள் யாவும் மாறி சாப்சலாம் சாயப், சலாம் அலேக்கும் சாயப்பென்னும் பக்கிரிபாத்திலிருப்பார்கள்.

ஏதோ சொற்ப சற்கருமத்தால் இங்கிலீஷ் துரைத்தனம் வந்து தோன்றி தங்கள் சீவனங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்ட வேதங்களையும் புராணங்களையும் இஸ்மிருதிகளையும் பாஷியங்களையும் சுருட்டி எறிந்து விட்டு ஐகோர்ட்டு உத்தியோகங்களுக்கான வேதங்களையும் ரெவினியூபோர்ட்டு உத்தியோகங்களுக்கான ஸ்மிருதிகளையும், ஆப்காரி ஆபீசு உத்தியோகங்களுக்கான உபநிஷத்துக்களையும், முநிசிபில் ஆபீக உத்தியோகங்களுக்கான பாஷியங்களையுங் கற்றுக்கொண்டு சுகஜீவனத்திலிருந்தும் மற்றும் சிலர் வடகலை நாமத் தென்கலைநாமச் சண்டையுடன் வடை பாயாசச் சண்டை, தோசை நெய் சண்டை, யிட்டுக்கொண்டு இருக்கின்றபடியால் அவர்கள் யாவருந் தங்களைப்போல் வேதப்புராணங்களை மறந்து கவர்ன்மென்டு ஆபீசுகளில் நிறைந்துவிடுவார்களானால் அப்போதுதான் தங்கள் வேஷபிராமணத்தை மாற்றி சகலரிடத்தும் ஒற்றுமெயடைய எண்ணம் கொண்டிருகின்றார்போலும்.