பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 45


பறையனென்போன் பணஞ் சம்பாதித்து முன்னுக்கு வரவேண்டிய இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டு. ஆதலின் இத்தேசத்தோர் சீர்திருத்தங்கள் யாவும் பறையனைப் பாழாக்கி பார்ப்பான் சுகமடையவேண்டியச் செய்கைகளிலிருக்கின்றபடியால் கதேச ஒற்றுமெயுஞ் சுதேசச் சீரும் எங்ஙனம் உண்டாகும்.

ஜப்பான் தேசத்திய இன்னோர் சிறப்புச்செயலையும் விசாரிப்பாம்.

அதாவது, ஓர் மந்திரியின் மைந்தனாயினும் ஓர் பெருத்த வியாபாரியின் சேயனாயினும் ஓர் பெருத்த உத்தியோகஸ்தனுடைய புத்திரனாயினும் தாங்கள் வாசஞ் செய்யுங் கிராமங்களை விட்டு அன்னிய கிராமங்களுக்காயினும் அன்னிய தேசங்களுக்காயினுஞ் சென்று தங்கட்கையிலிருந்தப் பணங்கள் சிலவாய்விடுமாயின் ஒருவரிடம் போய்க் கடன்கேழ்க்கமாட்டார்கள். (ரிக்ஷா) வண்டிகள் வைத்திருப்பவனிடஞ் சென்று ஓர் வண்டியை வாடகைக் கொடுத்துக்கொண்டுபோய் அவ்விடம் ஏறக்கூடிய மனிதர்களை ஏற்றிக்கொண்டுபோய் விடவேண்டிய இடங்களில் விட்டுப் பணங்களை சம்பாதித்து வண்டிக்கு உடையவனுக்குக் கொடுக்கவேண்டிய வாடகையையும் வண்டியையும் அவனிடஞ்கொடுத்து விட்டு தங்களிடமுள்ள பணத்தை வழி செலவுக்கு வைத்துக் கொண்டு வீடு சேர்வது வழக்கமாய் இருக்கின்றது.

இத்தகைய பிரபுக்களின் புத்திரர்கள் செயல்களைத் தங்கள் பெற்றோர்களிடஞ் சொல்லுவார்களானால் அவர்கள் சந்தோஷங்கொண்டு தங்கள் பிள்ளைகள் கையில் பணம் வரண்டபோது ஒருவனிடம் போய் கடன்வாங்காமலும் ஒருவனிடம் யாசகஞ் செய்யாமலும் ஒருவனிடம் களவு செய்யாமலும் தேகத்தை வருத்தி சம்பாதித்து சுகத்துடன் வந்து வீடுசேர்ந்தபடியால் எங்கள் பிள்ளைகள் தங்கள் தங்கள் சீவியகாலம் வரையில் ஆதுலர் நிலயற்று குபேர நிலையில் நிற்பார்கள் எனக் கூறுவர்.

இத்தகைய ஜப்பானிய சிறுவர்கள் செயலையும் பெரியோர்கள் மதியையும் இத்தேசத்தோர்கள் ஏற்பரோ, ஒருக்காலும் ஏற்கார்கள். அதாவது, இத்தேசத்தில் பிச்சை ஏற்பவன் பெரியசாதி என்றும் உழுதுண்பவன் சின்னசாதி என்று வகுத்து சோம்பேறி சீவனஞ் செய்துக் கொண்டு வருபவர்களாதலின் அம்மேலோர்கள் மதியஞ் செயலுங் காண்பது அரிதேயாம்.

இத்தேசத்தில் அத்தகைய மதியும் செயலும் பெற்றவர்கள் யாரென்பீரேல் பலசாதியோர்களாலும் பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைந்திருக்குஞ் சுதேசிகளேயாம். புத்ததன்ம சீலமிகுத்த சுகசீவிகளாக வாழ்ந்திருந்த சுதேசிகளை, வந்து குடியேறிய அசுதேசிகள் பறையர், பறையர் என்று தாழ்த்தி பலவகைத் துன்பங்களைச் செய்து நசித்தும், இந்த கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்திலும் அவர்களை கிராமங்களில் சுத்தசலங்களை மொண்டு குடிக்க விடாமலும், அம்மட்டர்களைச் சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை அவர்கள் வஸ்திரங்களை வெளுக்கவிடாமலும் தக்க உத்தியோகங்களில் பிரவேசிக்க விடாமலுஞ் செய்துக் கொண்டுவருகின்றார்கள்.

இவ்வகையான விரோதச் செய்கையை இன்னுஞ் செய்துக் கொண்டே வருவார்களாயின் அதிக முடிக்கியக் கயிறு அறுந்து திரும்புவது போல் அறுத்து லட்சத்திற்கு மேற்பட்டுள்ள பறையர்கள் என்போரில் ஒரு லட்சத்திற்குமேற் பட்டவர்கள் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் கருணையால் விவேகமிகுத்து தங்கள் பூர்வநிலையையும் தங்கள் சத்துருக்கள் செய்துக்கொண்டுவருங் கொடூரச் செய்கைகளையுங் கண்ணோக்கம் வைத்துக் கொண்டே வருகின்றார்கள்.

- 1:38: மார்ச் 4, 1908 -

யாது கண்ணோக்கமென்னில் இத்தென்தேசத்துள்ள வில்லியரென்னும் ஓர் கூட்டத்தார் காடுகளிலும் மலைகளிலுந் திரிந்துகொண்டு தக்க வஸ்திரம் இல்லாமலும் மலோபாதைக்குச் சென்றால் காலலம்பாமலுந் தேகசுத்தம்