பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம் / 21

புருசீகர்கள் செய்து வந்த மித்திர பேதத்திற்கும் சிற்றரசர்கள் ஆக்ஞைக்கும், மற்றக்குடிகள் பயந்து சாதிகட்டுக்குள் அடங்கி விட்டார்கள். சாக்கையர்களோ என்றால் அவர்கள் ஏற்படுத்திய சாதி கட்டுக்குள் அடங்காமல் தங்கள் குலகுருவின் ஞானமும் நீதியும் அழிந்து விடுகிறதென்னும் மனவருத்தத்தினால் புருசீகர்களைக்கண்ட இடங்களில் எல்லாம் அடித்துத் துரத்தியதும் அல்லாமல் மற்றக் குடிகளுக்கு சாதிபேதமும் விக்கிரங்களை சுவாமி என்பதும் பிசகென்று சிவவாக்கிய முதலிய நூற்களை இயற்றிக் கண்டித்து வந்தார்கள்.

சிவவாக்கியம் புத்தமதத்தைச் சார்ந்த நூலென்பதற்கு - அண்டர் கோனிருப்பிடம் அறிந்து கொண்ட ஞானிகள் - கண்ட கோவில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே என்னும் பாடல் போதுமான சாட்சியாயிருக்கின்றது. அண்டர் கோனென்பது புத்தருக்குரிய ஆயிரநாமங்களில் ஒன்றென்பதை - சூளாமணி என்னும் - நூலில் கூறியிருக்கும் புத்தர் தியானத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

விண்டாங்கு வெவ்வினை வெரூ உதிரநூறி
விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர்விளக்கு மாட்டிக்
கண்டார்கணின் னிலமை கண்டொழுகயானின்
கதிர்மயங்கு சோதியாற் கண்விளக்கப் பட்டுத்
தண்டா அமரை மலரின் மேனடந்தா யென்றும்
தமனீயப் பொன்னணையின் மேலமர்ந்தா யென்றும்
வண்டார சோகி நிழல் வாயமர்ந்தா யென்றும்
வாழ்த்தினால் வாராயோ வானவர்தங்கோவே.

புருசீகர்களோ என்றால் சிற்றரசர்களையும் பெருங் குடிகளையுந் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்தக் கியானிகளை பறையர் பறையரென்று தூற்றி கழுவு முதலியவைகளில் ஏற்றிக் கொன்றதும் அல்லாமல் ஓரிடங்களிலும் நிலைக்கவிடாமல் செய்து வந்ததாக அஷ்வகோசர் போதித்திருக்கின்றார்.

அதற்கு சாட்சியாக தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதம் இல்லாமல் நீதி செலுத்தும் கருணைதங்கிய ஆங்கிலேயர் ஆளுகையில் பறையர்களென்று வழங்கும்படியானவர்களை சுத்த சலத்தை மொண்டு குடிக்கவிடாமலும் இவர்கள் வஸ்த்திரங்களை வண்ணார்களைக் கொண்டு எடுக்கவிடாமலும் அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும் மேலான ஜீவனங்களில் பிரவேசிக்கவிடாமலும் கட்டுப்பாடு செய்து வைத்திருக்கும் அன்னிய சாதியார் தங்களுடைய சுய அதிகார காலங்களில் இவர்களை என்னென்ன துன்பங்களுக்கு ஆளாக்கி இருப்பார்கள் என்பதை ஒவ்வொருவருந் தெரிந்துக் கொள்ளலாம் இவ்வகையான கொடூர துன்பங்களினாலும் தேசங்களை விட்டு தேசமாறுதலினாலும் நாளுக்குநாள் இவ்விடம் குடியேறியிருக்கும் பலமதஸ்தர்களின் போதனையினாலும் புத்தரே நம்முடைய குலகுரு என்பதும் புத்தமதத்தான் நம்முடைய சுய மதமென்பதும் விளங்காமல் திறை மறைவாயிருக்கின்றது. ஆனால் இவர்களனுபவத்தினாலும் செய்கைகளினாலும் புத்தமதஸ்தர்களாகவே இருக்கின்றார்கள்.

எவ்வகையிலென்றால், நிகண்டில் கூறியிருக்கும் புத்தருக்குரிய பெயர்களில் முத்தனே முநிகருத்தன் முக்குடைச் செல்வன் முன்னோன் - என்று கூறியுள்ளபடிக்கு - இவர்களுக்குள், நாளதுவரையில் முத்தன், முனியன், கருப்பன், செல்லன் - என்னும் பெயர்களால் அழைத்துக் கொள்ளுவார்களல்லது வேறு மதத்தருடைய பெயர்களை விசேஷமாக வழங்கமாட்டார்கள்.

மணிமேகலையில் போதி நிழற்பொருந்தித் தோன்றும் நாதன்பாத நவைகெட வேத்தலென்று - புத்தருடைய போதனா நிலையைக்கூறி இருப்பதற்கு ஆதரவாக நாளது வரையில் இவர்கள் அரசமரத்தடியில் செங்கல்லை நட்டு முனியாண்டவன் பூசை செய்வார்களல்லது வேறுமரத்தடியில் வேறு வேறு தேவதைகளைப் பூசிப்பது கிடையாது அரசாணிக்கால் நட்டு புத்தர் சாட்சியாக விவாகங்கள் நடத்துவார்களல்லது - வேறு தேவதைகளை நியமிப்பது கிடையாது.