பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 / அயோத்திதாசர் சிந்தனைகள்


புத்ததன்ம ராட்சியம் பரவியிருந்தகாலத்தில் கண்டுபிடித்த தானியங்களை விட வேறு தானியங் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த நெய்களை விட வேறு நெய்கள் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த மூலிகைகளை விட வேறு மூலிகைகள் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த சருக்கரைகளைவிட வேறு சருக்கரைகள் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த விருட்சங்களை விட வேறு விருட்சங்கள் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த கனிவர்க்கங்களைவிட வேறு கனிவர்க்கங்கள் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த லோகங்களைவிட வேறு லோகங்கள் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த அவுஷதங்களைவிட வேறு அவுஷதங் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த கணித சாஸ்திரங்களைவிட வேறு சாஸ்திரங் கிடையா. அவர்கள் கண்டுபிடித்த இலக்கண இலக்கியங்களை விட வேறிலக்கிய விலக்கணங்கள் கிடையா.

மெய்யறச் சங்கங்கள் பரவியிருக்கும் அளவும் இத்தியாதி சீவோபகார வஸ்துக்கள் யாவும் பெருகிக் கொண்டே வந்து வேஷ பிராமண பொய்குருக்கள் தோன்றி பொய்ப்புராணங்கள் இயற்றி பொய்மதங்களைப் பரப்பி பொய்சாதிகளை நிறப்பி தங்களைப் பெரியசாதிகளாக ஏற்படுத்திக்கொண்டு தங்களுக்கு எதிரிகளாக இருந்து பொய் வேஷங்களையும், பொய்ப் புராணங்களையும், பொய் மதங்களையும் பொய் சாதிகளையுங் கண்டித்துவந்த விவேகிகளைத் தாழ்ந்தசாதிப் பறையர்கள் என்று வகுத்து பலவகை மித்திர பேதங்களால் நசித்துவந்ததுடன் சுத்த சலங்களை மொண்டுக் குடிக்கவிடாமலும். வண்ணார்களை அவர்கள் வஸ்திரங்களை எடுக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், பார்வைக்கு விகாரமும் மிக்க அசுத்தநிலையில் இருக்கும்படி வைத்துக்கொண்டு இத் தேசத்திற்கு நூதனமாக யார்வருகின்றார்களோ, அவர்களிடத்தில் இவர்களைக் காண்பித்து, இவர்கள் பறையர்கள் மெத்ததாழ்ந்த சாதியார் என்று பலவகையிலும் இழிவுகூறி புத்த சங்கத்தார்களையும் புத்ததன்மத்தையும் தாழ்த்திக்கொண்டே வந்ததினால், சகல ஞான விருத்திகள் யாவும் நாளுக்குநாள் நசிந்து வித்தியா விருத்திகளும் மறந்து ஒற்றுமெய்கள் குறைந்து பிச்சை ஏற்பதே சிறந்து பொய் சொற்களே நிறைந்துவிட்டது. இப்பண்டையீகைகளின் பெயரும் அதினந்தரார்த்தங்களும் அறியாத பேதைகள் வேஷ பிராமணர்களை அடுத்து விசாரிப்பதில் பூர்வ புத்ததன்ம வார்த்தைகள் அறியாப் பொய் குருக்கள் அசுரரென்னும் வார்த்தையின் பொருளும் இராட்சசர் என்னும் வார்த்தையின் பொருளும் அறியாமல் ஒவ்வோர் பொய் கதைகளைப் போதித்து அதைக்கொண்டே தங்களுக்காகப் பொருள் சம்பாதிக்கும் வழிகளையுந் தேடிக்கொண்டார்கள். (வேஷபிராமணர் செய்கையை விவேகிகள் கண்டித்த பாடல்கள்.)

சிவவாக்கியர்

சாதியாவதேதடா சலந்திரண்டநீரலோ
போதுவாசமொன்றலோ - பூதமைந்துமொன்றலோ
ஓதுவேதகீதமு மூணுரக்கமொன்றலோ
சாதியாவதென்பதே சாவுவாழ்வு திண்ணமே.

நித்தமு மணிகுலிக்கி நிடுமூலைபுக்கியே
கத்தியே கதரியே கண்களை மூடியென்பலன்
எத்தனைபேரெண்ணினாலு மெட்டுரண்டும் பத்தலோ
அத்தனுக்கு யேர்க்குமோ அறிவிலாதமாந்தரே.

பூதிபூசையென்று நீர்பூசைசெய்யும் பேதைகாள்
பூதிபூசையென்னினும் பூசை கொண்ட தெவ்விடம்
ஆதிபூசைகொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டது யின்னதென்றியம்புவீர்.

அசுரர்கள் என்பதும் இராட்சசர் என்பதும் செயல்பற்றியப் பெயர்களன்றி வடிவைப்பற்றியப் பெயர்களன்று. மதுமாமிஷம் புசிப்பவர்களுக்கு சுரரென்று பெயர். அதாவது, சுராபானம் அருந்துபவர்களேயாவர். அவ்விரண்டையும் நீக்கிநிற்போர் அசுரர், இராசதச் செயல்கள் யாதெனில்,