பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /23


இதற்குப் பகரமாய் அன்னிய தேசத்தோராகிய ஐரோப்பியர், அமெரிக்கர், ஜப்பானியர், சீனர் முதலிய தேசத்ரர் தங்களுக்குத் தாங்களே முயற்சித்து கைத்தொழில் விருத்தியையும், விவசாய விருத்தியையும் முன்னுக்குக் கொண்டுவந்து தேசத்தை சுகம்பெறச் செய்திருக்கின்றார்கள்.

நம்முடைய தேசத்தோரோ மதவிருத்தியிலும், சாதி விருத்தியிலும் நிலைத்து கைத்தொழில் விருத்தியையும், விவசாய விருத்தியையும் மறந்திருக்கின்றதை உணர்ந்த கருணைதங்கிய ராஜாங்கத்தோரே முயன்று கைத்தொழிற்சாலைகளையும், விவசாய சாலைகளையும் வகுத்து கற்பிப்பதற்காரம்பித்தும் நமது தேசத்தோர் அவைகளை நோக்கினாரில்லை.

இத்தகைய வித்தையிலும் புத்தியிலும் மிகுத்த பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தும் அவர்களது வித்தை புத்தியிலும், ஒற்றுமெய் நயத்திலும் பழகாமல் நமது பொய்யாகிய சாதிபேதத்திலும் புரட்டாகிய சமயத்து வேஷத்திலும் பழகிவருவோமானால் மற்ற தேசங்களைப் போலும், தேசத் தோரைப்போலும் விருத்திபெறுவது எக்காலமோ விளங்கவில்லை.

பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரே கருணைகொண்டு கைத்தொழிற் சாலை களையும், விவசாய சாலைகளையும் வகுத்து வைத்திருக்க அவைகளிற் சென்று விருத்திபெற விரும்பாதவர்கள் இராஜாங்க ஆலோசனை சங்கத்தை நோக்கி அதில் முன்னேற முயல்வார்களோ, முயன்றும் அதிற்சேர்ந்து தன்னவரன்னிய ரென்னும் பட்சபாதமின்றி நீதிவாதஞ் செய்வார்களோ அதுவும் விளங்கவில்லை.

ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் இவ்விந்து தேசத்தில் சாதிபேத வித்தைகளும், சமயபேத வித்தைகளும் மிக்க மலிந்து ஒற்றுமைக்கே டதிகரித்திருக்கிறபடியால் தற்கால நியமனமாகும் கவுன்சல் மெம்பர்களில் ஒருவகுப்பாரே மிக்க நிறம்பாது சகலவகுப்பாரும் நிறம்பி நிற்கத்தக்க ஏதுவில் நிலைக்கச்செய்து சகலவகுப்பாரையும் சீர்படுத்தி வைக்கக் கோறுகின்றோம்.

- 3:26; டிசம்பர் 8, 1909 –


36. பிரிட்டிஷ் ஆட்சியின் செங்கோலைப் பாருங்கள்

பிரிட்டிஷ் அரசர்கள் செய்துவரும் இராஜரீகத்தில் தன்னவரைப்போல் அன்னியர்களையும் பாதுகாக்குங் குணமிகுதியால் அவர்களது சட்டங்களையும் நீதியின் கோலால் அளந்து நடாத்தி வருகின்றார்கள். அத்தகைய நீதியிலும் நெறியிலும் நடாத்திவரும் செயலானது வஞ்சகர் களுக்குந் துஷ்டர்களுக்குந் தீயச்செயலே குடிகொண்டுள்ளவர்களுக்கும் ஐரோப்பியர்களது செங்கோலா லுண்டாகும் தெண்டனைகளை அலட்சிய மாகக் கருதி வெடிகுண்டுகளினாலும், கைத் துப்பாக்கிகளாலும் சுட்டுக் கொலைச்செய்து வருகின்றார்கள். முன்பு செய்துவந்தக் கொலைகளை அன்பர்கள் கேழ்வியுற்றிருக்கலாம்.

தற்காலம் நடந்திருக்குங் கொலையோ மிக்க விபரீத வஞ்சத்தைக் காட்டுகின்றது. பம்பாய் இராஜதானியில் வாசஞ்செய்யும் பிராமணரென்று சொல்லிக்கொள்ளும் வகுப்பைச்சேர்ந்த 18 வயதுடைய ஓர் பையன் நாசிக் கலைக்ட்டராயிருந்த மிஸ்டர் ஜாக்சன் என்பவரை சுட்டுக்கொலைச் செய்துவிட்டானாம்.

இத்தகையக் கொடும்பாவியின் செயலுக்குக் காரணம் யாதெனில், இந்த பிராமணப் பையனுடைய சினேகிதனொருவன் தனது துஷ்டத்தனத்தால் மேற்சொன்னபடி கலைக்கட்டரால் தீபாந்திரசிட்சை விதிக்கப்பட்டு விட்டானாம். சிட்சைபெற்ற துஷ்டனுக்கு மிக்க இஷ்டனாகிய இந்த துஷ்டன் தனது வஞ்சினத்தை நெஞ்சிற் பதியவைத்திருந்து சமயம் நேர்ந்த போது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான்.

இத்தியாதி வஞ்சின மிகுத்தோர்களும், கொலைப்பாதகர்களு மானவர்கள் தங்களுடைய அரசாட்சியும், செல்வாக்கும் உண்டாயிருந்த காலத்தில் தங்களுக்கு எதிரிகளாயிருந்த பௌத்தர்களை சகல மக்களும் பார்த்து திகிலடையும்படி வசியிற் குத்தியும், கழுவி லரைந்தும், கற்காணங்களிற் வைத்தரைத்துங் கொலை தண்டனை விதித்திருப்பதாக விளங்குகின்றது.