பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 - சுந்தர சண்முகனார்


உறங்கிய கைகேயியைக் கூனி எழுப்பிக் கூறுகிறாள். திங்களைப் (கிரகண காலத்தில்) பாம்பு பிடிப்பதற்குச் சிறிது முன்புகூடத் திங்கள் ஒளி வீசிக் கொண்டிருப்பது போன்று, உனக்குப் பெரிய துன்பம் நெருங்கியுள்ள இப்போதும் வருந்தாது உறங்கிக் கொண்டிருக்கிறாயே என்றாள்:


அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் குணங் கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல் பிணங்கு வான் பேரிடர் பிணிக்க கண்ணவும் உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் (

53)


ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பெரிய சோம்பேறி ஒருவன் வீட்டின் முன் கட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பின் கட்டில் தீ பற்றிக் கொண்டதாம். சிலர் வந்து- பின் கட்டில் தீ பற்றிக் கொண்டது- விரைவில் எழுக என எழுப்பினராம். அதற்கு அவன், பின் கட்டு தானே எரிகிறது? முன் கட்டிற்குத் தீ பரவியதும் எழுப்புங்கள் என்று கூறித் தூங்கினானாம். கைகேயியும் துன்பம் வந்த போதும் தூங்கினாளாம்.

கோசலை மைந்தன் பரதன்

கோசலை பெரு வாழ்வு வாழப் போகிறாள்- அதை அறியாது கிடக்கிறாய் நீ- என்று கூனி கைகேயியிடம் கூறியபோது, கைகேயி பதில் உரைக்கிறாள். நீ என்னவோ, கோசலை வாழ்ந்து விடப் போகிறாள் என்கிறாயே- கோசலை வாழ்வுக்கு இப்போது மட்டும் யாது குறைவு? கோசலையின் கணவனோ, மன்னர்கட் கெல்லாம் மன்னன்- கோசலையின் மைந்தனோ, சொல்ல முடியாத அளவுக்குப் பெரும் புகழ் படைத்துள்ள பரதன்- எனவே, இந்த வாழ்வினும் கோசலைக்கு இன்னும் வேறு என்ன பெரிய வாழ்வு வேண்டியிருக்கிறது?- என்றாள் கைகேயி.