பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 - சுந்தர சண்முகனார்

காடு ஏகுவதால், தந்தை சிறிதும் பொய்க்கவில்லை சொன்னபடி வரங்களை ஈந்து விட்டார்- மறந்தும் தவறு செய்யாதவர்- என்னும் நற்பெயர் தந்தைக்கு உண்டா கின்றதன்றோ? மற்றும், யான் காடு சென்று தவம் மேற்கொள்வதால் எனக்குச் சிறந்த நற்பயன் கிடைக்கும் இதனினும், யான் பிறந்ததனால் பெறக்கூடிய நற்பேறு யாதாய் இருக்க முடியும்?- என்று நயமொழி கூறி அன்னையைத் தேற்றுகிறான்:

சிறந்த தம்பி திருஉற, எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து பேரும் உறுதி பெற்றேன்; இதின்
பிறந்து யான்பெறும் பேறு என்பது யாவதோ?

(16)

உறைந்து=வசித்து, பேரும்=திரும்பப் பெயர்ந்து வரும்.

பத்து நாலு பகல்

இராமன் காடு செல்வதற்கு வருந்தித் தன்னையும் உடன் அழைத்துக் கொண்டு போகும்படி வேண்டிய தாய் கோசலைக்கு இராமன் கூறுகிறான்: உலகில் மிகப் பலர் காட்டில் தவம் இயற்றிப் பெரிய நன்மைகள் பெற்றுள்ளனர். எனவே, நீ திகைக்க வேண்டா. பதினான்கு ஆண்டு என்பது என்னளவில் பதினான்கு நாள்களே. பதினான்கு ஆண்டு காலத்தைப் பதினான்கு நாள்கள் போலக் கழித்து வந்து விடுவேன்.- வருந்தற்க என்கிறான்.

சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தார் அன்றே! எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்து நாலு பகல் அலவோ என்றான்

(21)

உயிரை மாய்க்கும் வள்ளன்மை

இராமன் பிரிவுக்காக வருந்தும் தயரதனின் உரை மிகவும் உள்ளத்தை ஈர்க்க வல்லது. பெரிய நாட்டையும்