பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


தமிழ் மக்களை, மொழியால், ஈன்றளித்த அவளது மான வாழ்வுக்கு ஆபத்துக்கள் நேர்ந்தால், நாம் கனி தரும் வாழை மரங்களாக மாறி நம்மை நாமே - அழித்துக் கொள்வோம்!

ஒளி தரும் மெழுகுவர்த்தியாகி, ஆட்சி வன்மை என்ற எதிர்ப்பு இருளை விரட்டியடித்து, மொழி ஒளி என்ற உரிமைகளை நிலை நாட்டுவோம்.

புகழ் என்ற சாம்பலைப் பூமிக்கு மேலே உதிர்த்து விட்ட ஊதுவத்திகளாக - நாட்டின் மொழிக்காக மணம் பரப்பி மறைவோம்.

இத்தகைய அருந்தமிழ், உலகின் ஆதி ஒரு மொழியாக இருந்த நிலை மாறி, தமிழ் - சமஸ்கிருதம் என்ற இரு மொழிகளுள் ஒன்றாகி, தற்போது பத்தொன்பது மொழிகளுள் ஒன்றாக ஒன்றி, மொழி ஆதிக்க ஆட்சிக்குள் ஆட்பட்டு அல்லல்படுகின்றது.

சமஸ்கிருதக் கலப்பின் ஆதிக்கத்தால் மணிப்பிரவாளம் என்ற மதமேறிய தமிழ் மொழி, இஸ்லாமியர் படையெடுப்புகளால் உருதுமொழிக் கலப்பின நோய்கட்கு இரையாகிப் பொலிவிழந்துள்ளது.

மராட்டியர், நாயக்கர் ஆட்சிகளின் மொழிப் பலாத்காரங்களுக்குப் பணியாமல், தமிழ் - தனது சீரிளமைச் சுய மரியாதைகளை இழக்காமல் - இன்னலுறுகின்றது.

ஆங்கிலேயரின் மூன்னூறு ஆண்டு கால வர்த்தக ஆட்சியின் குமாஸ்தா கல்வி திணிக்கப்பட்ட போதும்கூட, ஆங்கில மோகத்துக்கு அலட்சிய அன்பிடமளித்து அவதிப்பட்டு வருகின்றது.

இறுதியாக, 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு வட நாட்டினரின் ஆதிக்க இந்தி மொழியை, நாடாளுமன்றத் தர்பாரிலே மும்மொழித்திட்டம் என்ற சட்ட வடிவமாக்கி, இந்தியம் என்ற பெயரிலே மக்கள் மீது வடவர்கள் திணித்தார்கள்.

1937-ஆம் ஆண்டில், முதன் முதலாக இந்தி மொழியை ஆட்சி மொழி என்ற ஆதிக்க முள் முடி சூட்டி, மூதறிஞர் இராஜாஜி அவர்களால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது.

120