பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். என். வி. கலைமணி


புலவர் தெய்வ நாயகத்தின் ஆய்வுக் கண்ணோட்டங்கள், அவரின் மதத்தைச் சார்ந்ததுதான் என்பதைத் தெளிவாக உணர்ந்த நீங்கள், அரசியலால் வாய்ப்பு பெற்ற மதத்திற்கு அடிமையாக நினைக்கப் போகின்றீர்களா? அல்லது தென்றலைப் போலப் பொதுவாக்கப் போகின்றீர்களா? என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், இறுதியாக ஒன்றை மட்டும் கூறி எனது வரவேற்புரையை முடித்துக் கொள்கிறேன்.

படைப்புக் கதைகளில் மிகப் பழமையானது பாபிலோனிய, சுமேரிய கதைகள். இதன் கருத்து, யூதர்களின் யெகோவா படைப்புக் கதையாகும். (Creative litreature) இதைப் பின் பற்றியதுதான் கிறித்தவர்களின் பைபிள்.

இதே நேரத்தில், புருஷ சூக்தம், விஷ்ணு புராணத்தில் நாராய ணன் படைப்புக் கதை. இவற்றோடு, கால நிர்ணயமில்லாத தாந்திரி நூல்களில் காணப்படும் படைப்புக் கருத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

வரலாற்றுக் காலத்துக்கு முன்னதாக, (Pre historic period) இவைகளை வைத்துக்கொண்டு, மனித நாகரிக வளர்ச்சியை ஒருவாறு அனுமானிக்க முடிகின்றதே தவிர, நிரூபிப்பதே கடினம்.

ஆனால், எந்த விதத்திலும், மனித நாகரிக வளர்ச்சி, இப்படித் தான் இருந்திருக்க வேண்டுமென்பதில், அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை கிடையாது.

1.கீழ்நிலை வேட்டைச் சமுதாயம்
2. மேல்நிலை வேட்டைச் சமுதாயம்
3. மேய்த்தல்
4. விவசாயம்

இவற்றில் முதல் தொழிலாக உணவு சேகரித்தல், அதாவது விவசாயமும், இரண்டாவதாக வேட்டையாடுதலும் - மீன் பிடித்தலும், மூன்றாவதாக, ஆடு, மாடுகளைப் பிடித்து வளர்த்தலும், இறுதியாக விவசாயமும் - மனித நாகரிகத்தின் வளர்ச்சிகளாகப் பங்கேற்கின்றன.

167