முதல்தேவி கோசலை ☐ 93
மகன் வருகிறான் என்பதில் மகிழ்ச்சி; ஆனால், புடை சூழ்ந்து வரவேண்டியவர் யாவரும் எங்குச் சென்றுவிட்டனர் முடி சூடிக் கொண்டவனை இவ்வாறு தனியே வர விடுவார்களா? ஒரு வேளை தாய் வீட்டுக்கு வருகிற காரணத்தால் உடன் வர வேண்டியவர்கள் ஒதுங்கி நின்றுவிட்டார்களா! ஐயத்தின் மேல் ஐயம், அப்பெற்ற மனத்தைப் பிடித்து ஆட்டுகின்றது 'என்ன காரணமோ மைந்தன் தனியே வருவதற்கு?' என்பதை ஆய முற்பட்ட அத்தாய்மனம், விடை காண முடியாமல், இறுதியில் மகனைக் கூர்ந்து நோக்கத் தலைப் பட்டது. "மெளலி புனைந்தனன் வரும் என்று என்று" எதிர்பார்த்த மனம் உடையவள் ஆகலின், முதலில் மைந்தனுடைய முகத்தைக் கூடக் கவனியாமல், அவனுடைய தலையைக் கவனித்தாள் கோசலை. மகன் இன்னும் தூரத்தில்தான் வந்து கொண்டிருக்கிறான்.
இராமனின் தலையைத் தூரத்தே இருந்து கண்ட தாயின் வயிறு கரிக்கத் தொடங்கிவிட்டது. காரணம், இராகவன் தலையில் முடி இல்லாமையே. "புனைந்திலன் மெளலி” என்பதை அறிந்து கொண்டாள். ஒரு வேளை நல்வேளையை மாற்றி விட்டார்களோ!' என்ற ஐயம் மனத்தில் தோன்றிற்று. முடி இல்லாத தலையைக் கவனித்தாள். 'ஆ! இதென்ன புதுமை! முடி சூட்டலுக்கு முன்னர் நடைபெற வேண்டிய திருமஞ்சனம் கூடவா நடைபெறவில்லை? என்ன நிகழ்ந்திருக்கும்' என்று ஆராயத் தொடங்கிவிட்டாள் கோசலை. அவளுடைய ஐயத்திற்கு முடிவு காணுமுன்னர் வீரனாகிய இராமன் வந்து அவள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
"'புனைந்திலன் மெளலி! குஞ்சி
மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்! என்கொல்!' என்னும்
ஐயத்தாள் நளின பாதம்