கலைஞரின் சட்டமன்ற உரைகள்
147
அதுமாத்திரமல்ல. கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவிலிருந்து பியட் கார் தொழிற்சாலையை ஆரம்பிக்க அழைப்பு, பொது வுடைமைப்பற்றி பேசுகிற ரஷ்ய நாட்டிலேகூட இன்றைக்கு ஒரு தனிப்பட்ட பியட் கார் கம்பெனியைத்தான் அழைத்திருக்கிறார்கள். ஆக அங்கே ஒரு தனியார் துறையின் மூலம்தான் பியட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
அடுத்து, நமது எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்த அரசு விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை, மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, என்.ஜி.ஓ.-க்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்குப் பின்னாலே பேசிய அவர்களைச் சார்ந்தவர்களும் கேட்டார்கள். அதிக விவரங்கள் சொல்வதற்கு நேரம் இல்லாத காரணத்தால் சில விவரங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1967-68-ல் 57.6 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி இடையில் ஏற்பட்ட பயங்கர வறட்சிக்குப் பிறகு 1969-70-ல் 63.62 டன் உணவு அதிகமாக உற்பத்தியாகி இருக்கிறது. அதன் காரணமாக உணவுக் கட்டுப்பாட்டை ரத்து செய்து இருக்கிறோம். கனம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் என்ன சொன்னார்கள்? இது ஒரு அரசியல் ஸ்டன்ட், இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் கொண்டுவந்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். நானும் சொன்னேன். அவசியம் ஏற்பட்டால் மீண்டும் வர வேண்டும் என்று சொன்னால் கௌரவப் பிரச்சினையைப் பார்க்காமல் மீண்டும் கொண்டு வந்து விடுவோம் என்று சொன்னேன். கடவுள் கிருபையால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. (கே. வினாயகம் : உங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா?) பயப்படவேண்டாம் கடவுள் உங்கள் பக்கத்தைவிட்டு வெளியே போய் ரொம்ப நாள் ஆகிறது. கடவுளை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோமா என்பது பிரச்சினை இல்லை. நம்மைக்கடவுள் ஏற்றுக்கொள்ளுகிறாரா என்பதுதான் பிரச்சினை.
திரு. பி. ஜி. கருத்திருமன் : அது கடவுள் பிரச்சினை.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கடவுள் ஏற்றுக் கொள்ளுகிற வகையில் நாங்கள் காரியங்களைச் செய்கிறோம்.