கலைஞரின் சட்டமன்ற உரைகள்
185
என்று தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்கிறோம். வ.உ.சி. குடும்பத்தில்கூட அவரது மகள் ஆனந்தவல்லி அம்மையாரைத் தூத்துக்குடியில் பார்த்தேன். இப்போது அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
தில்லையாடி வள்ளியம்மையை மறக்காமல், தில்லை யாடியில் பிறந்து வளர்ந்து தென்னாப்பிரிக்காவில் உயிர்நீத்த நாகப்பனை மறக்காமல், நாராயணசாமியை மறக்காமல், வள்ளியம்மை நகரை உருவாக்கி, வள்ளியம்மை மண்டபத்தைக் கட்டி, அரிசன மக்களுக்காக நாகப்பன் நகர், நாராயணசாமி நகர் என்று உருவாக்கி தில்லையாடி கிராமத்தில் 10 இலட்சம் ரூபாயை இந்த அரசு தில்லையாடி வள்ளியம்மை நினைவாகச் செலவழித்திருக்கிறது.
விஸ்வநாததாஸ் பற்றி முடிதிருத்துவோர் மாநாட்டில் கேட்டுக் கொண்டார்கள். 'கொக்கு பறக்குதடி பாப்பா! வெள்ளைக் கொக்கு! பறக்குதடி பாப்பா!' என்று தேசீய மேடைகளில் முழங்கியவர் அவர் நடிகராக இருந்தாலும் போராட்டங்களில் இருந்து விதிவிலக்கு பெறாமல் (சிரிப்பு) பல போராட்டங்களில் சிறை சென்றவர் ! கஷ்ட நஷ்டங்களை ஏற்று சிறைச்சாலையில் வாடிய செம்மல் விஸ்வநாததாஸ் அவர்களின் குடும்பத்தைத் தேடிப் பிடித்து ஓய்வூதியம் அளித்து வருகிறோம்.
அது மாத்திரமல்ல, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக் குளித்து இறந்துபோன 9 வீரர்களின் குடும்பத்திற்கு 100 ரூபாய் மாத உதவித்தொகை கொடுத்து வருகிறோம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பல வகையிலும் உயிர்நீத்த, 1965-ம் ஆண்டு துப்பாக்கிப் பிரயோகத்தின்போது உயிர் நீத்த 53 குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் அளித்து வருகிறோம். அப்போது இருந்த அரசு அவர்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. இப்போது துப்பாக்கிப் பிரயோகம் நடந்தால் உடனே உதவித் தொகை கேட்கிறார்கள். நீதி விசாரணை கேட்கிகிறார்கள். ராஜினாமா செய் என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் 1965-ல் துப்பாக்கிப் பிரயோகத்தால் இறந்த 53 பேர்களின் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகையாக அளிக்க இந்த அரசு முடிவு செய்து அளிக்கப் பட்டிருக்கிறது.