பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

601

டாக்டர் சென்னா ரெட்டிக்கு இரங்கல்

உரை : 88

நாள் : 24.01.1997

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நினைப்பதற்கே நெஞ்சு அதிர்ச்சிக்கு ஆளாகின்ற நிலையில், தமிழகத்தின் ஆளுநராக இருந்து அனைவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான வராக விளங்கிய மறைந்துவிட்ட டாக்டர் சென்னா ரெட்டி அவர்களைப் பற்றி இந்த அவையில் இவ்வளவு விரைவில் இரங்கல் தீர்மானத்தைக் கொண்டு வரவும், அதன் மீது மாண்புமிகு உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினுடைய தலைவர்கள் உரையாற்று வதுமான நிலை வருமென்று நாம் யாரும் கருதவில்லை. எதிர் பாராத அளவுக்குத் துயரத்தில் நம்மையெல்லாம் சென்னா ரெட்டி அவர்கள் ஆழ்த்திவிட்டு இயற்கை எய்திவிட்டார்கள். அவர் இன்று இல்லை என்றாலும்கூட புகழ் உருவில் தமிழகத்தில், ஆந்திரத்தில், ஏன், இந்திய நாட்டில் அவர் இன்றைக்கு இருக்கிறார் என்றே கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவருடைய புகழ் வடிவம் நிலைபெற்ற ஒன்றாக ஆகி இருக்கின்றது.

நம்முடைய அவை முன்னவர் அவர்கள் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்த நேரத்திலும், அதைத் தொடர்ந்து தலைவர்கள் எல்லாம் இரங்கல் உரையாற்றிய நேரத்திலும் சென்னா ரெட்டி அவர்கள் வகித்த பதவிகளைப் பற்றியெல்லாம் எடுத்துக் கூறினார்கள். பஞ்சாப், இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அவர் கவர்னராகப் பதவி வகித்தார்; ஆந்திரத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்; மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார்; திட்டக்குழு துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இப்படி பதவி வகித்ததிலே