பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33/பாவேந்தரோடு நான்: சில நினைவுகள்


கவியரசர் தம் மாணவர்கட்கும், பரம்பரைக்கும் மட்டும் வழிகாட்டி அல்லர்; மனித இனத்திற்கே வழிகாட்டி ஆவார்.

கவியரசர் சீர்திருத்தத் திருமணங்கட்கெல்லாம் செல்வார். அப்போதெல்லாம் அவருடன் நானும் செல்வேன். திருமணத் தலைமை நிகழ்ச்சிக்குப் பின் பல கருத்துக்களை விளக்கி, மணமக்களைப் பலர் பாராட்டி வாழ்த்துவார்கள். என்னையும் பாராட்டுவோர்களுடன் ஒருவனாக்கி மணமக்களைப் பாராட்டச் செய்வார். இவ்வாறு பல திருமணங்களில் அவருடன் சென்று வாழ்த்தும் பேறு பெற்றுள்ளேன்.

பாவேந்தர் பாரதிதாசன் கவிசுப்பிரமணிய பாரதியின் ஏகவாரிசு; இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையில்லாப் பாவேந்தர்; தமக்கென்று ஒரு தனிப் பரம்பரையை ஏற்படுத்தித் தந்தவர். இவர் தமிழுக்குச் செய்த தொண்டு எண்ணிலடங்காது. தமிழ் இலக்கிய இலக்கண மரபை யொட்டித் தமிழைத் தம்வயப்படுத்திப் புதிய நோக்கோடு புதுப்புது உவமை, புதுப்புதுப்பாடல்களால் புதுப் புதுச் சுவைகூட்டி எழுதி எழுதிக் குவித்துத் தமிழ்த்தாயின் மணிமுடியை அழகு செய்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும். தமிழர்கள் ஏறுநடை போட-தனித்தமிழ்ச் சொற்கள் வழக்கில் தனிநடம் புரியச் செய்த பெருமையும் இவரையே சாரும். இவர் எழுதிய ஒவ்வொரு நூலும் ஒரு பொற்கிழி எனலாம்.

இவருக்கு மன்னர்மன்னன் (கோபதி) என்னும் ஒரே மகனும், மூன்று (சரசுவதி, வசந்தா, ரமணி[1]) மகளும் உள்ளனர். நால்வரும் திருமணமானவர்கள். கவியரசருக்குப் பெயரர்கள் பேர்த்திகள் நிரம்ப உள்ளனர். பெயரர்கள் பேர்த்திகள் என்றாலே கவியரசருக்குப் பேரின்பம். .


  1. ரமணி, பாவேந்தரின் கடைசி மகள். இவர் 1566-ல் இயற்கை எய்தினார்.