பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சாளர். இத்துணை துறைகளில் ஈடுபட்டுச் செயலாற்றிய கவிஞர் தமிழகத்தில் வேறு யாருமில்லை

இவரது பல்துறை ஈடுபாட்டால் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் இவரோடு ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்பு கொண்டவர்கள் பரந்து கிடக்கிறார்கள். ஆப்பக்காரியிலிருந்து அமைச்சர்வரை இப்பட்டியல் நீளுகிறது.

இதை நான் ஏதோ எதுகை மோனைக்காகக் கூறியதாக நினைக்கவேண்டாம். திருச்சி சிந்தாமணியில் பாவேந்தர் வழக்கமாகச் சென்று ஆப்பம் சாப்பிடும் ஒரு கடையின் சொந்தக்காரியைக் கண்டு பேசும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

சேலத்துக் குதிரை வண்டிக்காரன் ஒருவன் கூறினான்: "ஐயா, என் வண்டியிலதா ஏறிக்கிட்டுப்போவார். மாடர்ன் கேஃபிலே டிஃபன் சாப்பிடுவார். காஃபி குடிக்கறத்துக்காகவே வில்வாத்திரிக்குப் போவார்.

மிலிட்டரி சாப்பாட்டுக்கு வி. மார்க்கெட்டில இருக்கிற நித்தியானந்த பவனுக்குப் போவார். அந்தக்காலத்திலேயே எனக்கு ஒரு ரூபா வாடகை கொடுப்பார்"- என்று.

பாவேந்தர் வரலாறு இப்படித் தமிழ்நாட்டு மூலை முடுக்கெல்லாம் சிதறிக் கிடக்கிறது. அதைத் திரட்டுவதென்பது தனிப்பட்ட ஒருவரால் நடைபெறக்கூடிய செயலன்று. அரசாங்கமே ஒரு குழு அமைத்துச் செய்ய வேண்டிய வேலை.

பாவேந்தரைப்பற்றிய செய்திகளைத் திரட்டும்பணி எனக்கும் அவ்வளவு எளிதாக இருந்ததில்லை. பாவேந்தரோடு பழகிய நண்பர்கள் பலதிறப்பட்டவர்கள்.