பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலர் அவர்களே விரும்பிச் செய்திகளைக் கூறுவர்; சிலர் பலமுறை நடக்க வைத்துச் செய்திகளைக் கூறுவர்; சிலர் பலமுறை நடக்கவைத்தும் செய்தி எதுவும் கூறமாட்டார்கள்.

பாவேந்தரோடு நெருங்கிப் பழகிய சென்னையைச் சேர்ந்த குடும்ப நண்பர் ஒருவர்; அவரைத்தேடிச் சென்றால், எனக்குத் தடபுடலாக விருந்தெல்லாம் கிடைக்கும், செய்தி மட்டும் எதுவும் கிடைக்காது. அவரும் எழுதி வெளியிட்டபாடில்லை; இப்போது இறந்தும் விட்டார்.

பாவேந்தரோடு உள்ளங்கலந்து பழகிய அரசியல் நண்பர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர், “அண்ணாவைப்பற்றிப் பாரதிதாசன் என்று தரக் குறைவாகப் பத்திரிகையில் எழுதினாரோ, அன்றே வீட்டில் மாட்டியிருந்த அவர் படத்தையும், உள்ளத்தில் மாட்டியிருந்த அவர் நினைவையும் தூக்கி எறிந்துவிட்டேன்” என்று முகத்திலடித்தாற் போல் கூறுகிறார்கள். இன்றும் பாவேந்தரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

சில அரசியல் தலைவர்கள் மேடையில் பேசும்போது பாவேந்தர் மீது காட்டும் பரிவையும் மதிப்பையும், தனிமையில் சந்திக்கும் நேரங்களில் காட்டுவதில்லை. சில அரசியல் தலைவர்களை நெருங்கவே முடியவில்லை.

கிடைத்தற்கருமையான பாவேந்தரின் புகைப்படங்கள் சிலரிடம் இருக்கின்றன. திருவானைக்காவலில் நடைபெற்ற மணிவிழாப் படமொன்று மதுரை அன்பர் ஒருவருடைய வீட்டில் சட்டம்கூட இல்லாமல் குப்பையோடு குப்பையாகக் கிடந்தது. ஆனால் அந்தப் படத்தைக் கொடுக்க அவர் விரும்பவில்லை; கறையானுக்கு உணவாக்க முடிவு செய்திருக்கிறார்.