பக்கம்:அருளாளர்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 * அருளாளர்கள்



நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இதனை அன்றாடம் அநுபவித்துக் கொண்டிருக்கிறோம். தகுதியும், பண்பாடும், கருணையும், நடுநிலையும் இல்லாதவர்கள் கையில் அதிகாரம் கிடைத்துவிட்டால் அதனால் மக்கள் கூட்டம் படுகின்ற துயரத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விடும். இதனை 19ஆம் நூற்றாண்டிலேயே நினைத்துப் பார்க்கின்றார் வள்ளற்பெருமான். இப்படிப்பட்ட மக்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் அவர்கள் படுத்துகின்ற பாட்டை நான் நன்றாக அறிகின்றேன். ஐயா இவர்களைப் பார்த்தபோதெல்லாம் அஞ்சினேன். அங்கே துயரத்தைக் கண்டு வருந்தினேன் என்றவர் இங்கே அஞ்சினேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன ? அதிகாரிகளைக் கண்டு அஞ்சிவிட்டாரா? இல்லை, அச்சம் என்பது இந்தப் பெருமக்களுடைய வரலாற்றிலேயே இல்லை. அதனாலே அஞ்சினேன் என்று சொல்வதற்குரிய கருத்தென்ன? இவர்களைப் படைத்து இவர்கள் கையில் அதிகாரம் சிக்குமாறு செய்தவன் இறைவன் அல்லவா என்று நினைக்கும் பொழுது அச்சம் தோன்றுகிறது. இந்தக் கொடியவனை இறைவனே படைத்திருக்கிறான். ஆகையால் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து அஞ்சினேன் என்று சொல்கிறார். ஆகவே மிகப் புதிய வழியில் அவர் செல்வதை நாம் காண முடிகிறது. இனி உலகியல் முறையில் மக்கள் பசியைப் போக்க வேண்டுமென்ற ஒரு முடிவுக்கு அவர் வருகிறார். ஆன்மிக முறையில் விக்கிரக வழிபாட்டை விட்டு வளர்ந்து வளர்ந்து சென்று ஆறாவது திருமுறையை பாடத் தொடங்கும் பொழுது மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று விடுகின்றார். அங்கே என்ன முடிவுக்கு வருகின்றார்?

இதுவரையில் சம்பிரதாயமாகக் கற்ற சாத்திரங்கள், நூல்கள் முதலியன எல்லாம் குறுக்கே நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/221&oldid=1291992" இலிருந்து மீள்விக்கப்பட்டது