ரா. சீனிவாசன்
37
"மூன்று குளம் வெட்டினேன்
அதில் இரண்டு குளம் பாழ்
ஒன்றிலே தண்ணியே இல்லை"
அந்தப் பாட்டுதான் எனக்கு கவனம் வருகிறது. நான் எந்தக் குளம் என்பதே எனக்குத் தெரியவில்லை.
இந்த நாட்டிலே முதியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகி விட்டனர். என் அப்பாவைப் பற்றி நினைக்கும்போது அந்த எண்ணம்தான் வந்தது. இளைஞர்கள் அமெரிக்காவையும் மேல் நாட்டையும் படிக்கிறார்கள். அவனவன் மணம் செய்து கொண்டதும் தனிக்குடித்தனம் போய் விடுகிறார்கள். கூட்டுக் குடும்பங்கள் சிதறிப் போகின்றன. வளர்ச்சிதான்; இல்லை என்று சொல்லவில்லை. இந்த முதியவர்களை யார் கவனிப்பார்கள். காலத்துக்கும் உழைத்த அந்தக் கரங்களுக்கு ஒய்வு வேண்டாமா. அந்தக் கடமையை அவன் மறந்து விட்டான்.
மனைவிக்கு உரிமை தரவேண்டும். அதனால் ஒருவன் தன் உரிமையை இழக்க வேண்டுமா. பெண் சில நாளாவது தாய்விட்டுக்குச் சென்று தன் பெற்றோர்களைப் பார்த்து வரு கிறாள். அவளுக்கு இந்த உணர்வு இருக்கிறது. அந்த உணர்வு இவனுக்கு இருக்க வேண்டாமா. அவள் தன் கடமையைச் செய்கிறாள். அவன் தன் கடமையை மறந்து விட்டான்.
தந்தை மகனுக்குச் செய்யும் உதவி அவனை முன்னுக்குக் கொண்டு வருவது. அவன் புகழில் தன் வாழ்வைக் காண்கிறான். ஆனால் அதே தந்தையைத் தான் தன் அப்பன் என்று சொல்லிக் கொள்ள அவன் வெட்கப்பட்டான். அப்புறம் இதைப் போலவே பலர் இருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
அவன் என்ன செய்வான். அவன் வாழ்வின் உச்சியில் ஏறிவிட்டால் மறுபடியும் கீழே பார்க்கும்பொழுது எல்லாரும் சின்னவர்களாகத்தான் தெரிகிறார்கள். யானை எல்லாம் எருமையாகத் தெரியும். பசுக்கள் எல்லாம் ஆடுகளாகத் தெரியும்.