பக்கம்:அறவோர் மு. வ.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

அறவோர் மு. வ.

புகாமல் காத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு காப்போமானால் கட்டாயம் குறிக்கோளை அடைய முடியும். உலகத்தையும் உடம்பையும் திருத்துவதை விட இவ்வாறு மனத்தைப் பண்படுத்துவதுதான் கருதியபடி கைகூடுவது என்பதை உணரவேண்டும்.

★ தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும், நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நல்ல தன்மையோடு வல்லமையும் சேரப்பெற்று வாழ வேண்டும்.

★ இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும்; ஈ எறும்பாலும் முடியும்; துன்பத்திற்குத் துணையாக வல்லவர்களையே தேடவேண்டும். உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இத்தகையோரையே தேட வேண்டும்.

★ வாழ்க்கையில் மனிதர்களின் தொடர்பு கசக்கும் நாள் வரும். ஆனால் உயர்ந்த புத்தகங்களின் கருத்துகள் என்றுமே கசப்பதில்லை.

★ விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.

★ காதல் வாழ்வில் இரண்டு உள்ளம் வேண்டும். ஒன்று அமைதி உள்ளம்; ஒன்று ஆற்றல் உள்ளம். அமைதி, ஆற்றல் பெறவேண்டும். ஆற்றல், அமைதி பெற வேண்டும்.

★ நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்கவேண்டும். ஒன்று, நம் உள்ளம். அது நன்றாக இருப்பதற்காகவே அறநெறியும் கடவுள் வழிபாடும் அமைந்தன. மற்றொன்று உடம்பு அது நன்றாக இருப்பதற்கு நல்ல உணவும் உடையும் தொழிலும் மருந்தும் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/205&oldid=1224447" இலிருந்து மீள்விக்கப்பட்டது