இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
31
- கள்ளோ காவியமோ, பக். 88
வாழ்க்கை ஒரு கலை. அதில் வெற்றி பெற வேண்டும் என்று மொழிகின்றார்.
"அவன் வாழ்க்கையை ஒரு கலையாகத் தேர்ந்தவன். திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவதில் வல்லவன். பழைய பகை முதலியவற்றை மறந்து வாழ வேண்டும் என்று எனக்குச் சொன்னது அவனுக்கு வாழ்க்கையில் அனுபவமானது"
- மண்குடிசை, பக். 24
என்று மண்குடிசையில் கூறுவது வாழ்க்கையை எவ்வாறு கலையாகப் போற்ற வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துகின்றது.
இப்படிக் கோயிலாகவும், கலையாகவும் விளங்கும் வாழ்க்கை, துளசிபோல் தூய எளிய வாழ்க்கையாகத் துலங்க வேண்டும் என்பது மு. வ. அவர்களின் விழைவு. வாழும் வாழ்வு எளிய வாழ்வாக இருந்தபோதிலும் அந்த வாழ்வு உயர்ந்த வாழ்வாகத் துலங்க வேண்டும். அந்த உயர்ந்த வாழ்வு வாழ்வதற்குரிய வகையையும் உணர்த்துகின்றார் அவர்.
"உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டுமானால், ஒன்று மனம் குறுகிக் குறுகித் தன்னையும் மறந்து போகும் நிலைக்கு வரவேண்டும். அல்லது மனம் விரிந்து எல்லையற்ற உலகத்தில் திரிய வேண்டும்."
- பெற்ற மனம், பக். 282
இந்த வாழ்க்கையில் அறிவுக்கு இடம் இல்லை. அந்த அறிவு முழுக்க முழுக்க அறைபோக வேண்டும். அன்பும் நயமும்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அவற்றோடு உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.