15
'முத்தெ'ன்று மூத்தோர் போற்றும் முதுபெருங் குடிமரத்தின்
கொத்தொன்று பூத்துக் காய்த்துக் குணம்மண மொருமித் தொன்றிச்
சத்தொன்றிச் சார மொன்றிச் சமமிரண் டென்ற வொன்று
பித்தென்றால் பின்ன ரொன்று பெருமையைப் பெறுமா றுண்டோ?
அம்புவி தனிலே நானும், அருமருந் தன்ன வுன்னைத்
தம்பியாய்ப் பெற்ற தாலென் தலைநிமிர்த் திட்ட தேனும்,
செம்பினைத் தங்க மென்று தெரிந்தெடுத் தவன் நீ யாயின்,
வெம்பிநா னுருகிச் சாவேன் வேதனை மேலிட்' டென்றான்.
தம்பியின் தவிப்பும் தரமான விடையும்
பரந்தாழ்ந்து தமயன் பன்னிப் பகர்ந்தஇம் மாற்றம் கேட்டான்,
உரந்தாழ்த்தா னுணர்வு தாழ்ந்தான்; உறுதிநீண் டுறுதி வாய்ந்த
கரந்தாழ்ந்தான்; கண்ணீர் தாழ்ந்து கலங்கினான்; கருதி மெல்லச்
சிரந்தாழ்ந்து சொன்னான்; சேர்ந்த சிந்தைதா ழாது நின்றே!
"கருவுறை யொன்றாய், ஈன்று காத்ததாய் தந்தை யொன்றாய்,
உருவறி வுணர்வு மொன்றாய், உணவுடை கல்வி யொன்றாய்,
இருவரு மிருந்து வாழும் இல்லமு மொன்றே யாயும்
ஒருவரை யொருவ ரின்னும் உணரோரா யுள்ளேம் போலும்!
நித்தியன் நெஞ்சு நிலைகுலைதல்
'ஞானத்தை நயந்து வாழ்வாய் நல்லோனா' யெனவோ ரன்னை,
'மானத்தை மதித்து வாழ்வாய் மனிதனா' யெனவோ ரன்னை,
'தானத்தைத் தந்து வாழ்வாய் தக்கோனா' யெனவோ ரன்னை,
'ஈனத்தை யிணைத்து வாழ்வாய்' என்றவ ளோவென் னன்னை?