29
வேணி மூர்ச்சித்து வீழ்தல்
சொன்னவை சொற்க ளேனும் சூலமா யுளத்தில் தைக்கத்
தன்னுணர் வற்றுத் தன்னைத் தாங்குவோர் தானு மின்றி,
அன்னப்பே டதனைக் கவ்வும் அரவம்போல் கறுத்து நீண்ட
பின்னலும் கிடக்கப் பின்னால், பேச்சற்றுச் சாய்ந்தாள் பேதை!
ஆதலு மழிதல் தானும் அரிவையன் றறியா ளாகிக்
'காதலும் புதிது; காதல் கைகூடும் கதிகா ணாமல்
நோதலும் புதிது; நொந்து நுவல்வது புரியாள் வீழ்ந்து
சாதலும் புதிதே' யென்னச் சவமொப்பக் கிடந்தாள் பாவை!
மாணிக்கம் மனம் மாற்றமடைதல்
வேணிக்கு தேர்ந்து விட்ட வெறிப்பினைக் கண்டு, வேறு
பாணிக்க நேர மின்றிப் பதைபதைத் தருகில் வந்து,
'சாணுக்கோர் துயர மிந்தச் சகத்தினி லுளதா' மென்றே
மாணிக்கம் மனங்க சிந்து மலா்முகம் துடைத்தாள் மாறாய்!
தந்தேனம் தனிலே தண்ணீர் தளிர்க்கையா லிறைத்தாள்; தாழ்த்து
முந்தானை யாலே மெல்ல முகத்தின்மேல் விசிற லானாள்:
'செந்தேனே! வேணி!' என்று சிந்தையும் கரைந்த ழைத்தாள்;
"நொந்தெனை நோகா தேநீ! நோய்தீர்ப்பே னெழுவா யென்றாள்.
எண்ணியல் பறிந்தோர்க் கேனும், எழுத்தியல் பறிந்தோர்க் கேனும்,
மண்ணியல் பறிந்தோர்க் கேனும், மாபெரு மளவில் காணும்
விண்ணியல் பறிந்தோர்க் கேனும் விளங்குமா றில்லை, விழும்
பெண்ணியல் பறிதல்! பேணும் பெண்ணுக்கே எளிதாம் போலும்!