35
இன்பமென் பதனை யெண்ணி யிடைவிடா திதய மேங்கித்
துன்பங்கள் தொடர்ந்த போதும் துணிவொரு துளியுங் குன்றா
தென்புநெக் குருகக் கண்டாங் கிணைத்திடத் துடிக்குங் காத
லன்பினைத் தேடிச் செல்லும் ஆராஅன் பானாள் வேணி!
மணவினை காணா ளேனும் மனமிரண் டொருமித் தொன்றிக்
கணவனைக் கருத்தில் கண்ட காரிகை, கண்ணில் காணப்
பணிவினைப் பணியில் வைத்துப் பாங்கொடு பண்ணி வைத்த
வுணவினை யெடுத்துச் சென்றா ளூர்கடந் துவந்த வாறே!
மதர்த்துயர்ந் திரும ருங்கும் மரஞ்செடி கொடிகள் மல்கிப்
புதர்களாய்ப் படர்ந்து வேலிப் பூக்களாய் மலர்ந்த பாதை;
எதிரினில் வருவ தென்ன? இருப்பதிங் கெதுவென் றெண்ணாள்,
கதிரவன் தன்னைக் காணக் கமலமே வருவ தொத்தாள்.
கடலோடு கலக்க வந்த காட்டாறோ? காத்தி ருக்கு
முடலோடு கலக்க வந்த வவப்புற்ற வுளமோ? ஓம்ப,
மிடலோடு கலக்க வந்த மேம்பாடோ? மெல்லி யல்தான்,
சுடலோடு கலக்க வந்தாள், சோற்றையும் சுமந்த வாறே.
காதலியல்பு
பலரையும் பற்றி நீங்காப் பண்பதில் படிந்தும், பாரில்
சிலரையே சேர்ந்து நீங்காச் சிறப்பினைச் செய்யும் காதல்,
புலரியைப் பொருந்தி நீங்காப் புத்தொளி போற்பொ திந்து,
மலரினை மறுத்து நீங்கா மணமெனக் கமழும் மாதோ!
காதலர் கண்டுகொளல்
நிலையது நினைத்து, நேரம் நீருழ வுரம்நேர் வித்தேயர்
மலையிது வெனமண் ணில்நென் மணிகளை விளைவிக் கின்ற
கலையது கரைகண் டான்கண் களித்திடக் கன்னி வந்தாள்,
அலையது கரைகண் டன்றி அடங்குமா றறியா வாறே.