46
வேணி தன்னிலை விளக்கல்
எட்டாகி, யொன்ப தாகி, இடையிர வாகி, யெல்லாம்
அட்டாகி, ஆறி யாயும், அருந்துவோர் காணா ளாகிக்
கட்டாகிக் கிடந்த வாசல் கதவரு கேகிக் கண்ணைப்
பட்டாகி யொளிர்நி லாவில் பளிங்காகிப் பதித்தாள் வேணி!
முத்தத்தின் நினைவு மூண்டு முகத்தினை மலர்த்த, மாமா
சத்தியன் சலச லப்பால் சஞ்சல முலர்த்த நின்றாள்,
நித்தியன் வரவும், நெஞ்ச நெகிழ்வுடன் நிலையைச் சுட்டி,
"இத்தினம் பசியெ வர்க்கும் எடுக்காத தேன்தா" னென்றாள்
நிலையையோர்ந்து செயல்படல்
தலையினைத் தாழ்த்திப் பின்பு 'தடதட' வெனமே லேறிச்
சிலையென இருந்தோர் தம்மைச் சிரிப்புட னுறுத்த நோக்கி,
"விலையினைக் கூட்டிக் கேட்டான் வியாபாரி; கம்ப றுக்கும்
நிலையினில் ஆட்கள் வேண்டி நீங்கினே னழைக்க நானும்!
நித்தியன் திகழ்ந்ததை நவிலல்
அமிழ்தென்று கருதும், முல்லை அரியநன் மலர்கள் தோய்ந்து
கமழ்தென்ற லென்று கூறும்,- கார்வானிற் பூத்த திங்கட்
குமிழ்துன்றி யொழுகும் கோலக் குளிர்நில வெனஇ னிக்கும்
தமிழ்தின்ற மக்கள் தம்மைத் தாழ்த்தினீர் தயையில் லாதே!
தாயைப்போ லெண்ணி நொந்து தமை நாடி வந்தோர்க் கெல்லாம்
சேயைப்போ லெண்ணி யீந்து சிறப்புற்ற தமிழர் நாட்டில்,
பேயைப்போல் பொருளைத் தேடிப் பெருமைக்குச் சிறுமை நேர,
நாயைப்போல் வாலை யாட்ட நடத்துவீர் நலிவுற் றாரை!