பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி.கலைமணி

107



அதன் விளைவுதான்; அண்ணா அவர்களால் குளுமையாகவும் பேசமுடிகிறது - அந்தக் குளிர்ச்சியிலே மெய்மறந்து போவார்களேயானால், செயல் தடைபடும் அல்லவா? அப்போது, வெதவெப்பால் அவர்களை எழுப்பியாக வேண்டிய கட்டத்திலும் அறிஞர் அண்ணா இருக்கிறார்:

கரையிட்டுத் தடுத்தால் கடல் உள்ளே வராது என்று - நல்லவர்களைச் சிறையிட்டுப் பழக்கப்பட்டவர்கள் - கடலுக்கு அருகாமையிலேயே, கரையாக இருக்கிறார்கள்!

கால வெள்ளத்தால், இதுவரை சக்தியிழக்காத கடலின் பயம், கரைகளுக்கு இருந்தே வருகிறது.

அறிஞர் அண்ணா ஒரு பெருங்கடல், அந்த ஊழி வெள்ளத்தை உப்புச் சிறையிட்டு ஒடுக்க, முனைந்தால் நீரின் நெருக்கத்தால் - கரையின் அணுக்கள் விலகியே நிற்கும். அதனைத்தான் கடற்கோள் என்கின்றோம்!

திராவிடரியக்கம், என்ற அலைக் கரங்களை வைத்திருக்கின்ற அண்ணா அவர்கள் - காங்கிரசின் பலமான கரையைத், தமிழகத்தில் விழுங்கியிருக்கின்றார்.

ஐந்தாண்டுத் திட்டங்களால், ஆழியை அடக்க முயல்பவன், வீறிட்டெழும் அலையின் வளைக் கரத்தால் எப்போதும் விழுங்கப்படுவான்.

உலகத்தின் பேரறிஞர்கள் - எப்போதும் இயற்கையின் திரட்சியாவார்கள். அவர்களின் மனோபல சக்தி, இயற்கையைச் சிறை பிடித்திருக்கிறது.

அறிஞர்கள் இயற்கையின் பகுதி என்று அறிந்த பிறகு, வெறும் பிரச்சினைகளால், உருவான அரசியல் கட்சிகளின் சட்டங்கள், அதனை ஒன்றும் செய்துவிட முடியாது.

கொந்தளிக்கும் கடலிலிருந்து மின்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்துக் கொள்ள வேண்டுமே தவிர, கரிக்கிறதே கடலென்று கருதி - கடல் மீது போர் தொடுக்கக் கூடாது!