பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



அண்ணாவின் அறிவுரைகளிலிருந்து நாட்டுக்குரிய நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அவர் கட்சித் தலைவர் என்பதற்காகப் - புறக்கணிக்கக் கூடாது; அது புத்திசாலித்தனமுமன்று!

கடலைக் கூர்ந்து கவனித்தால், அதனுடைய ஆழம் அளப்பரிய தூரத்திலிருந்தாலும் - நீர்மட்டும், மக்கள் வாழும் நிலப்பகுதியோடு ஒன்றியிருப்பது தெரியும்.

ஆழ்ந்த அறிவுடையோர், எப்போதும் மக்களுடன் சரி சமமாகவே இருப்பார்கள். அந்தஸ்து - பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதைத் தவறாகக் கணக்கிட்டுக் கொண்டு, ஆழத்தை மேடென்று நினைத்து ஏறினால், அவர்களுடைய பயணம் பாதாளத்தை நோக்கித்தான் நடக்கும்!

அதோ அந்தக் கடல், அடிவானத்தின் உதட்டை, அனாதிக் காலந்தொட்டுச் சுவைத்துக் கொண்டிருக்கிறது.

எங்கு நோக்கினும் பரந்த விரிந்த நீர்த் தகடு, அமைதியோடு; தொடு வானத்தை தழுவிக் கொண்டிருக்கிறது.

இந்த மயக்கக் காட்சியிலிருந்து பாடம் பெற வேண்டியவர்கள், அதை மாயை' என்று கூறி, பதம் குலைந்து விடுகிறார்கள்.

எவ்வளவுதான் உயரமான நிலையிலே ஒருவன் இருந்தாலும் - அவன் கடலைப் போன்ற ஆழ்ந்த அறிவாளர்களிடத்தில் அடிவணங்கித்தான் ஆக வேண்டும் என்பது - அடிவானத்தின் தத்துவமாகும்.

கரையிலிருப்பவர்கள், தங்களுடைய செங்கோலை வைத்துக் கொண்டு, அடிவானுக்கும் - ஆழிக்கும், ஏற்பட்டத் தொடர்பை அலட்சியமாக நினைக்கும்பொழுது - அடுக்கடுக்காக வருகின்ற அலைப் புரட்சியை, சாதாரணமாக நினைக்கும்பொழுது - எத்தனையோ கோல்கள், அந்த அகண்ட அறிவுக் கடலின் ஆழத்தில் விழுந்து, முழுகிவிட்டிருப்பதையும் காண முடிகிறது.

எதேச்சாதிகாரிகள், தங்கள் ஆணவக் கோலைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் - கிடைக்கவில்லை.