பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




அந்த அகமகிழ்வோடு, சோலையிலே புகுந்த தென்றலே, நீ கத்தி போன்ற தாழை மடல்களையெல்லாம் சுற்றிச் சுழற்றச் செய்து அறப்போர் வீரர்களாக ஆக்கிவிட்டாய்.

சாதாரண தாழை மடல்கள் - கத்திபோல் கூர்மையானதாக இருப்பினும், அவற்றை வீரர்களாக நடமாடச் செய்து விட்ட பெருமை, உன்னையல்லால் வேறு எவருக்குண்டு?

அத்தகைய வீரர்களைப் போல நடித்த நாணற் பூக்களை - பூ உருவிலே புகுந்துவிட்ட பயனற்றவைகள் என்று, அவற்றைக் காட்சிப் பொருளாக்கி விட்டாயே.

தென்றலை அனுபவிக்க முடியாத அவை, புயலிலே சிக்கிச் சிக்கிச் சுழன்று வருகின்ற நிலையை; அவை தேடிக் கொண்டன.

நீ போகும் இடமெல்லாம் உனக்கு வரவேற்பு! வாழ்த்து! விழாக்கோலம்!

நாணற்பூக்கள், பெயருக்குப் பூவாக இருக்கின்றன! பிறவி எடுத்துவிட்டமைக்கா அலை பாய்ந்து, வளைந்து, நெளிந்து; வறண்டு சோர்ந்து விழுகின்றன!

அவற்றைக்கூட நீ மன்னித்து விடுகிறாய்; சில்லென்று வீசி! ஆனால், அவைதான் தலை குனிந்து விடுகின்றன; வெட்கத்தால்!

உன்னைக் கண்டால் மக்களுக்குப் பிடிக்கும்; மகிழ்கிறார்கள். ஆனால், சுரம் கண்டவன் மட்டும் உன்னைக் கண்டு ஓடி ஒளிகிறானே!

இதற்கு நீ எப்படிக் காரணமாவாய்? எடுத்த பிறவியின் கோல மல்லவா? மன்னிப்போம்! மறப்போம்! வாழ்க நின் நீடு புகழ்!

தாழை மடல், கத்தி போன்றது. அறப்போர் வீரர்களை மொழிப் போர்க் களத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாய்! எப்படி?

மூங்கிலிலே பண்ணெழுப்பி - போர்ப் பரணியைப் பாட வைத்து அனுப்புகிறாய்! இதைக் கண்டு மக்கள் வியக்கின்றார்கள்.